Thursday 31 July 2014

சிகரம்: போர்க்குற்றமும் சர்வதேச சமூகமும் .

மே 18, 2009.
                       தமிழர்களோ அல்லது தமிழர் நலனில் அக்கறையுள்ள எவருமோ இந்தத்திகதியை அவ்வளவு இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மூன்று தசாப்தகால யுத்தம் முற்றுமுழுதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாள்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள். வீதிகள் தோறும் சிங்களவர்கள் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு கொட்டும் மழையிலும் கூட வெற்றிக்களிப்பிலும் தமிழர்களை வென்றுவிட்டோம் என்ற ஆணவத்திலும் மிதந்து தமிழர்களின் உணர்வுகளை சீண்டிப்பார்த்த நாள்.
மறந்திருக்க மாட்டார்கள் தான் - ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன என்றபோதும் மறந்திருக்க மாட்டார்கள்தான்.
 
                                இலங்கையில் ஈழத்தமிழர் மற்றும் மலையகத்தமிழர் என இரு தமிழ்ச் சமூகங்கள் உள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்து மூன்று தசாப்தங்களாகப் புரியப்பட்ட யுத்தம் ஈழத்தமிழர் நலன் சார்ந்து ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும். அதில் மலையகத் தமிழர்களின் நலன் சற்றேனும் கவனத்திற் கொள்ளப்படவில்லை.

முழுமையாக வாசிக்க இங்கே செல்லவும்:

சிகரம்: போர்க்குற்றமும் சர்வதேச சமூகமும் .:

Wednesday 30 July 2014

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08

பகுதி - 01
 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01
பகுதி - 02 

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02

பகுதி - 03

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03

பகுதி - 04

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04

பகுதி - 05

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05 

பகுதி - 06
 

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06 
பகுதி - 07
கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07




         


பகுதி - 08
திவ்யா பரீட்சை முடிந்து வரும் நேரம் நெருங்க நெருங்க மனம் படபடவென அடித்துக் கொண்டது. பாடசாலையில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து வந்து தான் பேரூந்து நிலையத்தை அடைய வேண்டும். பாடசாலைக்கும் பேரூந்து நிலையத்திற்குமான இடைவெளி தான் அவளிடம் பேச உகந்த இடமாக இருந்தது. ஏனெனில் அந்த பிரதேசத்திற்குள் வெளியாரின் நடமாட்டம் இருக்காது. மேலும் அந்த எல்லைக்குள் சொல்லப்பட்ட காதல்கள் ஏராளம். தைரியமாக அந்த இடத்தில் வைத்து பேசி விட்டால் எப்படிப்பட்ட பெண்ணையும் மடக்கிவிட முடியும் என்பது எங்கள் 'ஐதீகம்'.

குனிந்த தலை நிமிராமல் வந்து கொண்டிருந்தாள் திவ்யா. "ஹாய்........." என்ற குரலோடு கையை நீட்டி இடைமறித்து அவளை நிறுத்தி அவள்முன் நின்றேன் நான். திடுக்கிட்டு சட்டென நின்று பார்த்தாள். நான் மறுபடியும் "ஹாய்......" என்றேன்.
"ஹாய் ஜெய்..." என்றாள் புன்னகையோடு. 'அட, நம்ம பெயர் இவளுக்கு எப்படி?' என்று ஆச்சரியப் பட்டுப் போனேன் நான். மேலும் அவள் விலகிச் செல்வாள் என்று பார்த்தால் நெருங்கி வருகிற மாதிரி கதைத்ததும் கூடுதல் ஆச்சரியத்தைத் தந்தது.

 
"என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும்.........?" கேட்டேன்.

"தெரியும்...... அத பிறகு சொல்றேன். உங்கள கல்யாணத்துல பார்த்தது நினைவிருக்கு."
 
"எனக்கும்..... சரி. உங்க பேரு?"
 
"சொல்லணுமா?"
 
"சொல்லலாமே...............?"
 
"திவ்யா."
 
"அழகான பேர்."
 
"சரி. நா வர்றேன்....."
 
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்......"
 
"அன்னிக்கு கல்யாணத்துல கண்டதுனால தான் இப்ப பேசினேன். உங்கள மறுபடியும் காணுவேன்னு நினைக்கல. கண்டேன். பேசணும்னு தோணிச்சு. பேசிட்டேன். இனி என்ன இருக்கு?"
 
"ஏன்? நாம கொஞ்சம் பழகலாமே?"
 
"எப்படி பழகணும்னு எதிர்பார்க்குறீங்க?"
 
"இல்ல..... உங்கள புடிச்சிருக்கு....."
 
"கண்டதும் காதலா?"
 
"அப்படி சொல்லல. பழகிப் பார்க்கலாமே?"
 
"எங்க வீட்ல இந்த காதல் கத்தரிக்காயெல்லாம் ஏத்துக்க மாட்டங்க."
 
"அப்போ என்னை பிடிச்சிருக்கு. அப்படித்தானே?"
 
"..............................................................."
 
"மௌனம் சம்மதமா?"
 
அதற்கு மேல் அவள் பேசவில்லை. தன் நடையில் வேகம் சேர்த்து அவ்விடத்தில் இருந்து அகன்றாள். சற்றுத் தூரத்தில் நின்ற தன் தோழிகளுடன் அப்போது வந்த பேரூந்தில் ஏறிப் பயணித்தாள், ஜன்னலினூடே என்னைப் பார்த்துக் கொண்டே.........
 
திவ்யாவை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப் போயிருந்தது என்றாலும் அவளுடன் பேசுவதில் இருந்த தயக்கத்தை நண்பர்கள் வாயிலாக துடைத்தெறிந்து சில நிமிடங்கள் பேசியதில் மனம் குதூகலித்துக் கொண்டது. ஆனால் என் கேள்விக்கு பதில் சொல்லாமல் போனது மனதின் ஒரு ஓரத்தில் கவலையைத் தந்தது.
 
"கலக்கிட்ட மச்சான்......." நண்பர்களின் குரல் கேட்டு நினைவுச் சிறையிலிருந்து விடுபட்டேன்.
 
"பதில் சொல்லாம போறாடா...." - நான்.
 
"சரி விடு..... நாளைக்கு பார்த்துக்கலாம்" - சுசி
 
"ம்ம்ம்......" - நான்
 
"அவள பின்தொடர்ந்து போவோமா?" - முரளி
 
"பஸ் தான் போயிருச்சில்ல.....?" - சுசி
 
"போயிருச்சா....? சொல்லவே இல்ல....?" - முரளி
 
"சும்மா இரு முரளி....." - நான்
 
"ஏன்டா ஜெய் கோவப்படுற?" - முரளி
 
"நீ வேற...." - நான்
 
"நாளைக்கு நீ அவகிட்ட பேச வேணாம் ஜெய்...." - விசு
 
"ஏன்டா?" - நான்
 
"நாளைக்கு அவ என்ன செய்றான்னு பார்ப்போம்...." - விசு
 
"ஆமாண்டா... விசு சொல்றது தான் சரி...." - சுசி
 
"டேய்... அவ பரீட்சை எழுதுற வரைக்கும் ஏதும் பண்ண வேணான்னு தோணுது......" - நான்
 
"ஏன்டா?" - முரளி
 
"ஒரு வேளை அவ நல்லா படிக்கிறவளா இருக்கலாம். அநாவசியமா எதுக்கு குழப்பணும்னு பாக்குறேன்" - நான்
 
"நீ சொல்றதும் சரி தான்..." - சுசி
 
"சரிடா... ஏதாச்சும் பார்த்துப் பண்ணலாம்... நாளைக்கு நாம சொன்ன மாதிரி செய்யலாம் என்ன?" - விசு
 
"சரிடா....." - நான்.
 
அத்தோடு எங்கள் அன்றைய சந்திப்பும் முடிவடைந்து போக அவரவர் பாதைகளில் பயணிக்க ஆரம்பித்தோம்.
                                   **********************************************************************


"என்னடா ஒன்னும் பேசாம வாற?"
 
"திவ்யா என்ன பேசப் போறான்னு தெரியலியே......."
 
"சரி..... அத விடு... நடக்குறது நடக்கட்டும். மனசைப் போட்டுக் குழப்பிக்காதடா"
 
"எப்படி சுசி? என்னால முடியல.... ஒரே குழப்பமா இருக்குடா....."
 
"என்ன குழப்பம் உனக்கு?"
 
"திவ்யா ஏன் பேசக் கூப்பிட்டிருக்கான்னு தெரியல. அனேகமா நாங்க கடைசியா சந்திச்சப்ப பேசினதப் பத்தித்தான் பேசுவான்னு நினைக்கிறேன்."
 
"எனக்கும் அப்படித்தான் இருக்குமோன்னு தோணுது ஜே.கே."
 
"நாங்க நந்தினிய பொண்ணு பார்க்கப் போறதுக்கு முன்னாடி நான் தான் மாப்பிள்ளனு திவ்யாவுக்கு தெரிஞ்சிருக்குமா சுசி?"
 
"சரியா சொல்லத் தெரியலடா..... ஆமா..... போட்டோ குடுக்கலன்னு சொல்லிருந்தேல்ல?"
 
"ஆமா. நாங்க போட்டோ குடுக்கல. அப்பாவோட நண்பருக்கு தெரிஞ்ச இடம்னு சொல்லிட்டிருந்தாரு."
 
"ம்ம்.... திவ்யாவுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லன்னு தான் நினைக்கிறேன்."
 
"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா என்னோட நம்பர திவ்யா குடுத்ததா தானே நந்தினி சொன்னா?"
 
"எல்லாக் கேள்விக்கும் திவ்யாவால தான் பதில் சொல்ல முடியும்."
 
"ம்ம்ம்............." - பெருமூச்செறிந்து கொண்டேன் நான்.
 
ஒன்றரை மணி நேரப் பிரயாணத்தின் பின் திவ்யாவின் ஊரை ஒட்டிய இடத்தில் நாங்கள் வழமையாகச் சந்திக்கும் இடத்தை வந்தடைந்தோம். அங்கே ஏற்கனவே சிவப்பு நிற மாருதி கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் கார்க் கதவைத் திறந்து கொண்டு இறங்கும் நேரத்தில் அந்த மாருதியின் கதவுகளும் திறந்து கொண்டன.
திவ்யா மட்டுமே காரிலிருந்து இறங்கினாள். ஒரு வேளை அவள் மட்டுமே வந்திருக்கக் கூடும். சுசி காருக்கருகிலேயே நின்று கொண்டான். நாங்கள் இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் சென்றோம்.

 
"திவ்யா......"
 
"ஜே.கே. நல்லா இருக்கீங்களா.......?"
 
"ம்ம்... இருக்கேன்....... நீ?"
 
"நானும் இருக்கேன். பிரிஞ்சு ரெண்டு வருஷமாச்சில்ல "
 
"ஆமா திவ்யா.... ஆனா இப்ப வரைக்கும் உன்ன மறுபடியும் ஒரு தடவையாவது பார்த்துற மாட்டமான்னு தவிப்பா இருந்திச்சி....."
 
"எனக்கும் தான்... இப்ப மனசுக்கு ஓரளவுக்கு ஆறுதலா இருக்கு...."
 
"மெலிஞ்சிட்ட போல?"
 
"ம்ம்... நீங்களும்..."
 
"சொல்லு திவ்யா....."
 
"கல்யாணத்துக்கு தயாராயிட்டீங்க போலிருக்கு?"
 
"இல்ல திவ்யா.... பல நேரங்கள்ல மனசுக்குப் பிடிக்காத வாழ்க்கையைத்தானே அமைச்சுக்க வேண்டியிருக்கு?"
 
"ம்ம்.... நந்தினிய கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?"
 
திவ்யா என்ன முடிவில் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் இன்னமும் யூகிக்க முடியவில்லை. 'நந்தினியா, நானா என்கிறாளா?' இல்லை 'நந்தினி தான் உனக்கு என்கிறாளா?'. குழப்பத்துடன் என் பதிலை முன்வைத்தேன்.

**********


"கல்யாண வைபோகம்" தொடரினை "சிகரம்" வலைத்தளத்தில் தொடர...


பகுதி - 01




பகுதி - 02





 
 
 

"கல்யாண வைபோகத்தினை" இனிதே நடத்திட கைகோர்த்திடுங்கள் .

-இரு வீட்டார் அழைப்பு-

Tuesday 29 July 2014

பட்டப்பகலில் பாலியல் கொடூரம்

பட்டப்பகலில் பாலியல் கொடூரம்: மலையகத்தை அதிரவைத்த டெல்வின் சம்பவம்!


அன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை.
இறக்குவானை டெல்வின் பி பிரிவில் ஓர் ஏழைத் தாய் மகளைத் தேடிக்கொண்டிருந்தாள்.
அன்று முற்பகல் 11.30 மணியளவில் பக்கத்துத் தோட்டத்துக்குச் சென்ற மகளை காணாத ஏக்கம் ஒருபுறம் என்ன நடந்திருக்குமோ என்ற பயம் ஒருபுறம் என அந்தத் தாயின் மனது படபடத்தது.
நிமிட முள் தாண்டும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இடியாய் விழுந்தது அந்த ஒலி.
மணி பிற்பகல் 2 ஐ தாண்டியிருந்தது.
பித்துப்பிடித்தவளாய் தன்னிடம் மகள் ஓடிவருவதைக் கண்ட தாய் மேலும் பதறிப்போனாள். கூந்தல் கலைந்து பதற்றமான முகத்துடன் கதறியழுதுகொண்டு மகள் ஓடிவந்ததைப் பார்த்த தாயின் உள்ளம் மணலில் விழுந்த புழுவாய் துடித்தது.
ஏன் தாமதமாகினாய் என்ற கேள்விக்கு மகளிடமிருந்து கிடைத்த பதில் ஆயிரம் அசுரபலமுள்ள யானைகள் இதயத்தில் மிதிப்பது போன்ற வலியை அந்தத் தாய்க்கு உண்டாக்கியது.
ஆம்! அந்தச் சிறுமி மனித மிருகமொன்றின் காமப் பசிக்கு இறையாகியிருக்கின்றாள்.
டெல்வின் என்ற பெயரால் அழைக்கப்படும் சின்னத் தோட்டம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. டெல்வின் பி பிரிவில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள் வாசுகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
பதினாறு வயதான வாசுகியின் தந்தை தோட்டத்தில் சில நாட்களும் ஏனைய நாட்களில் இறக்குவானை சந்தையில் கூலித்தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இல்லத்தரசியாய் குடும்பத்தை நிர்வகிக்கும் தாய், சில காலமாக தோட்டத்தில் வேலை செய்தவள்.
ஐந்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள். கடைக்குட்டிதான் வாசுகி. ஏழ்மை காரணமாக பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தவள்.
அன்று 20 ஆம் திகதி நரக வேதனையை அனுபவிக்கப் போவதை அறியாத வாசுகி டெல்வின் ஏ பிரிவுக்கு தனது உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்புகையில் இந்த அவலம் நடந்திருக்கிறது.
சஞ்சலமற்ற பிஞ்சுக் குழந்தைபோல நடந்து வந்த வாசுகியை துணியொன்றினால் முகத்தை மூடி பாழடைந்த குடிலொன்றுக்கு இழுத்துச் சென்றுள்ளான் ஒரு காமுகன்.
அங்கு நேர்ந்த அவலத்தை தன் தாயிடம் சொல்ல முடியாமல் தவித்தாள் வாசுகி.
இச்சம்பவம் காட்டுத் தீ போல இறக்குவானை எங்கும் பரவியது. பாதிக்கப்பட்ட சிறுமி இறக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மலைக் குன்றுகள் சூழ எப்போதுமே மேகக் கூட்டம் நிறைந்து இயற்கை அன்னையின் நெற்றித் திலகமோ என எண்ணத் தோன்றும் இறக்குவானை சோகத்தில் மூழ்கியது.
உடனடியாக பெற்றோர் இறக்குவானை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பொலிஸார் வாசுகியின் வீட்டுக்கு வருகை தந்து விசாரித் துள்ளனர். எனினும் அவர்கள் சந்தேக நபரை கைது செய்யவில்லை.
சந்தேக நபர் அப்பகுதியில் சுதந்திரமாக நடமாடுவதைக் கண்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.
இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்துக்கும் மாகாண சபை உறுப்பினர் கணபதி இராமச்சந்திரனுக்கும் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் பொலிஸாரின் அசமந்தப் போக்கை கண்டித்தும் சந்தேக நபரை உடனடியாக கைது செய்யக் கோரியும் 21 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இறக்குவானையை அண்டிய தோட்டப்பகுதிகள் அனைத்தும் முடங்கின. தெனியாய, பலாங்கொடை, இரத்தினபுரி தோட்டப்பகுதி மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
சுமார் ஆயிரக்கணக்கானோர் இறக்குவானை நகரில் கூடி பொலிஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
 
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வோருக்கு எதிராக பொலிஸார் இரகசியமாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அங்கு தகவல் பரவியதால் மேலும் பதற்றம் அதிகரித்தது.
பொலிஸார் பக்கசார்பாக நடந்துகொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.
சந்தேக நபரை 24 மணிநேரத்துக்குள் கைது செய்வதாக இறக்குவானை பொலிஸார் பொதுமக்களுக்கு உறுதியளித்தனர்.
சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரை கைது செய்யக்கோரி மலையகம் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்து மறுநாளும் இறக்குவானையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சந்தேக நபர் சரணடைந்துள்ளதாகவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்துக்கு வருகை தந்த இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா தெரிவித்தார்.
அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இத்தகவலை நம்பமுடியாவிட்டால் தன்னுடன் குறுவிட்ட சிறைச்சாலைக்கு பத்துப்பேர் வருமாறு ரஞ்சித் சொய்ஸா அழைப்பு விடுத்தார்.ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சந்தேக நபரான மொஹமட் அர்ஷாட் (27) எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதன் மூலமே இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
இறக்குவானை சம்பவத்தைப் பொறுத் தவரையில் பட்டப்பகலில் இந்தப் பாலியல் குற்றம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான குற்றச் செயல்களின் மூலம்
சிறுவர்களின் எதிர்காலமே பாதிப்படைகிறது.
இரும்புக் கரங்களுக்குள் அகப்பட்டுத் தவித்த சிறுமி வாசுகியின் தாயார் இது குறித்து கேசரி நாளிதழுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
"எனக்கு அஞ்சுப் பிள்ளைங்க. ஏ டிவிஷனுக்குப் போன பிள்ளை ரொம்ப நேரமா வீட்டுக்கு வரல்லனு தேடிப்பார்த்தேன். இப்படியொரு கொடும நடக்கும்னு நான் நெனச்சுப் பார்க்கல.
என் பிள்ளைய இரத்னபுர ஆஸ்பத்திரியில நிப்பாட்டுனாங்க. பொலிஸ் துரைமார் ஏதேதோ சிங்களத்தில பேசிக்கிட்டாங்க. எனக்கு எதுவும் புரியல்ல. மகள் வயித்து வலினு அழுதுகிட்டே இருந்தா.
ஆஸ்பத்திரி டொக்டர் என்ன கூப்பிட்டு, மகளுக்கு இப்போ நல்ல சுகம். வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகலாம்னு சொல்லி மருந்து கொடுத்தாங்க. ஒவ்வொரு நிமிஷமும் நாங்க செத்துத் துடிக்கிறோம்"
அந்தத் தாயின் வார்த்தைகளில் இதயத்தின் வலிகளை புரிந்துகொள்ள முடிந்தது.
இச்சம்பவத்தில் பொலிஸாரின் அசமந்தப் போக்கு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினமே பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் ஏன் சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை?
விசாரணைகளில் அசமந்தப் போக்கு கடைபிடிக்கப்பட்டதன் பின்னணி என்ன?
முற்றாக குணமடையாத நிலையில் அவசரமாக சிறுமியை இரத்தினபுரி வைத்தியசாலையிலிருந்து அழைத்து வரப்பட்டது ஏன்?
என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.
எது எவ்வாறெனினும் முறையான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
ஏழ்மை என்பதை காரணமாகக் கொண்டு பக்கசார்புடன் பொலிஸார் செயற்படுவார்களே யானால் அது அரசாங்கத்துக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும் என்பதை உரிய தரப்பினர் உணர வேண்டும்.
இளைஞர்களிடையே காணப்படும் பிற்போக்குடைய சிந்தனைகள் அவர்களுடைய நடத்தைகளை மாற்றி விடுகின்றன. தங்களுடைய காமப்பசிக்கு பச்சிளம் குழந்தைகளையும் சிறுமியரையும் இலக்காகக் கொள்ளுபவர்கள் பாதிக்கப்படுவோரின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதில்லை.
இறக்குவானை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படலாம். ஆனால் அந்த அப்பாவி சிறுமியின் எதிர்காலம் என்னாவது?
எத்தனையோ கனவுகள், இலட்சியங்களுடன் எதிர்காலத்தை எதிர்பார்ப்புடன் பார்த்துக் காத்திருந்த சிறுமியின் மனநிலையை எவ்வாறு விபரிக்க முடியும்?
அந்தச் சிறுமி அனுபவித்த மரண வேதனையை யாருக்கும் சொல்ல முடியாமல் தவிக்கும் ரணங்களை பகிர்ந்துகொள்ளத்தான் இயலுமா?
உண்மையில் சமூக மாற்றத்துக்காக அனைவரும் இணைந்து பணியாற்றுவதனூடாகவே காத்திரமான முன்னேற்றத்தை அடைய முடியும். ஆதலால் கீழ்த்தரமான சிந்தனைகளை கைவிட்டு ஆரோக்கியமான எதிர்காலத்துக்காக பாடுபட வேண்டும்.
அதேபோல பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் பொலிஸாரையே நம்பியிருக்கிறார்கள். பொலிஸார் அசமந்தப் போக்குடன் இருப்பார்களானால் தமது பிரச்சினைகளை யாரிடம் முறையிட முடியும்?
இந்தப் பிரச்சினையில் பொலிஸாரின் காலதாமதமான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இனிமேலும் இவ்வாறான நிலை உருவாகாமல் இருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்த வேண்டும்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் குற்றவாளியாக இனங்காணப்படுமிடத்து உச்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
எதிர்காலத்தில் வாசுகி போன்ற யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதை உணர்த்துவதாக அத்தண்டனை அமைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
செய்தி - நன்றி: வீரகேசரி.
2014.07.26

Saturday 26 July 2014

ராஜேந்திர சோழன் 1000

ங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு இது. 'கங்கை கொண்ட சோழன்’ புதினம் மூலம் ராஜேந்திர சோழனின் அசகாய சாதனைகளை விவரித்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். அவரிடம் ராஜேந்திர சோழனின் பராக்கிரமங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக் கேட்டோம்...

''ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி, கங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டி வந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. அதன்பிறகு மற்ற மன்னர்கள் பகைவரைத் தடுப்பதோடு சரி. தாக்கியதற்கான சரித்திரம் இல்லை.

கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த ராஜராம் கோமகன் என்பவர், ராஜேந்திர சோழனின் 1000-வது பட்டாபிஷேக விழாவைக் கொண்டாடத் திட்டங்கள் போட்டிருக்கிறார். நானும் கலந்துகொள்கிறேன். இந்த மாதிரியான விழாக்கள், தமிழர் சரித்திரம் மீது ஆர்வம்கொண்ட இளைஞர்களுக்கு உதவி செய்யும். தமிழ், மேலும் வாழும்!''



''ராஜேந்திர சோழனின் தீரம் எத்தகையது?''
'' 'அலைகடல் மீது பல கலம் செலுத்தி’ என்றுதான் அவன் மெய்கீர்த்தி சொல்கிறது. கடலின் தன்மை தெரிந்து, காற்றின் தன்மை தெரிந்து, இருட்டில் சுடர் மூலம் வழி தெரிந்து, ஆமைகள் போகிற நீரோட்டப் பாதை தெரிந்து, நூற்றுக்கணக்கான நாவாய்கள் அதாவது மிகப் பெரிய மரக்கலங்களோடு அவன் கிழக்கே உள்ள நாடுகளுக்குப் போயிருக்கிறான். இன்றைய சிங்கப்பூர், மலேசியா, ஜாவா, இந்தோனேசியா... எனப் பல நாடுகளில் அவன் கால்கள் பதித்திருக்கிறான். போரில் வென்று பெரும்பொருட்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கிறான்.

சோழர்களுக்கு நடு நாடு, தொண்டை நாடு, தாண்டி கீழைச் சாளுக்கிய நாட்டோடு மிக நல்ல நட்பு இருந்திருக்கிறது. அதாவது ஆந்திர மக்களோடு, தமிழர்கள் மிக நெருக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், மேலைச் சாளுக்கியம் என்கிற கன்னட மக்களோடுதான் அவர்கள் எப்போதுமே முரண்பட்டு இருக்கிறார்கள். கீழைச் சாளுக்கியத்தை கன்னடர்கள் கபளீகரம் செய்யாதிருக்க, மணவினை ஏற்பாடு செய்து கீழைச் சாளுக்கியத்துக்கு மிகப் பெரிய படை அனுப்பவேண்டிய நிர்பந்தம் ராஜேந்திர சோழனுக்கு ஏற்பட்டது.

கீழைச் சாளுக்கியத்துக்கு மேல் இருந்து கலிங்க தேசமும் ஒட்ட தேசமும் அவனுக்குத் தொந்தரவு செய்ததால் அதைத் தண்டிக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. அவ்வளவு தொலைவு போய்விட்டதால் இன்னும் சற்று நகர்ந்து, வங்காளத்தில் புகுந்து மிகப் பெரிய கங்கை நதியையும், படகுகளையும், முகத்துவாரத்தையும் அவன் பார்த்து வியந்திருக்கிறான். யானைகள் வைத்து பாலம் கட்டி, அதன் மீது குதிரைகள் ஏற்றி மறுகரைக்குப் போயிருக் கிறான். இடைவிடாது மழை பெய்யும் அசாம் வரைக்கும் அவன் போயிருக்க வேண்டும்.

அங்கு இருந்த பெண்டிர், பண்டாரங்களை மட்டும் அல்ல... கோயில் சிலைகளையும் பெயர்த்து எடுத்து வந்திருக்கிறான். அவன் கொண்டுவந்த பல சிலைகளை என்ன காரணத்தினாலோ கங்கை கொண்ட சோழபுரத்தில் வைக்காமல், அதன் அருகே செங்கமேடு என்ற கிராமத்தில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்படுகின்றன. எந்த வழிபாடும் இல்லாமல் இருக்கின்றன!''

''ராஜேந்திர சோழனின் சொந்த வாழ்க்கையில் என்ன செய்தி இருக்கிறது?''
''அவனுக்கு மனைவியர் பலர். அதில் வீரமா தேவி என்பவள் மிக நெருக்கம். ராஜேந்திர சோழன் தன் 84-ம் வயதில் மரணமடைந்தபோது அவளும் உடன்கட்டை ஏறினாள். ராஜேந்திர சோழன் தன் மத்திம வயதில் திருவாரூரைச் சேர்ந்த பரவை என்கிற தேவரடியாரை நேசித்தான். தேவரடியார் என்று அப்போது அழைக்கப்பட்டவர்கள், தங்களை கோயிலுக்கு எனத் தீர்மானம் செய்தவர்கள்; நித்யசுமங்கலிகள். அவர்களைத் திருமணம் செய்துகொண்டால் அது ஒரு வைப்பாட்டி நிலையில்தான் இருக்கும். ஆனால், பரவையின் அறிவிலும் அழகிலும் ஈர்க்கப்பட்டு, ராஜேந்திர சோழன் அவளை அவ்விதம் நடத்தாமல், தன் தேரில் ஏற்றி திருவாரூர் முழுவதும் சுற்றி வந்தான். அவள் விரும்பியதால் செங்கல்லால் அமைந்த திருவாரூர் கோயிலைக் கருங்கல்லால் உருவாக்கி, அதன் மீது தங்கத் தகடு வேய்ந்து, அவளை முதன்முதலில் சந்தித்த இடத்தில் ஒரு கல்வெட்டு பொறித்திருக்கிறான். அவள் உயரத்துக்கு ஒரு வெண்கலக் குத்துவிளக்குச் செய்யச் சொல்லி அதைக் கருவறையில் வைத்து ஏற்றியிருக்கிறான். இன்று இருக்கும் விளக்கும் அவன் கொடுத்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது!
 
இதே விதமாக ராஜேந்திர சோழன் தன்னுடைய தந்தையின் அனுக்கிக்கு... அதாவது காதல் தோழிக்கு ஒரு பள்ளிப்படை கோயில் எழுப்பியிருக்கிறான். அவளுக்கு பஞ்சவன் மாதேவி என்று பெயர். பஞ்சவன் மாதேவி பட்டமகிஷியும் அல்ல; மனைவியும் அல்ல; அனுக்கி. அதாவது, கேர்ள் ஃப்ரெண்ட்போல. ஆனால், அவள் ராஜேந்திரனால் அங்கீகரிக்கப்பட்டு, தாய் எனப் போற்றியிருக்கிறான். அந்தப் பள்ளிப்படை கோயில் இன்றளவும் நன்றாக இருக்கிறது!''

''நாட்டின் நிர்வாகம் எப்படி இருந்தது?''
''மிகச் சிறப்பாக இருந்தது. விவசாயத் தொழில்கள் மிக அற்புதமாக நடைபெற்றன. ஒரு காசுக்கு 150 வாழைப்பழம். ஒரு பொற்காசுக்கு இரண்டு பசு மாடுகள், ஓர் எருமை. ஒரு பொற்காசுக்கு ஆழாக்கு ஏலக்காய் என வியாபாரங்கள் நடந்திருக்கின்றன. பசு சல்லிசாகக் கிடைக்கும். ஆனால், ஏலக்காய் கேரளத்தில் இருந்து வரவேண்டும். அதனால் விலை அதிகம். கம்மாளர்களுக்கும் சிற்பிகளுக்கும் உலோகத் தச்சர்களுக்கும் மரத் தச்சர்களுக்கும் மிகப் பெரிய மரியாதை இருந்தது. அவர்கள் நல்லது கெட்டதுக்கு சங்கு ஊதிக்கொள்ளவும், வீட்டுக்கு இரண்டு வாசல் வைத்துக்கொள்ளவும், சுண்ணாம்பு அடித்துக்கொள்ளவும், செருப்பு அணிந்துகொள்ளவும், பல்லக்கில் ஏறவும், தோளில் துணி போத்திக்கொள்ளவும், தலைப்பாகை அணியவும், பூணூல் அணிந்துகொள்ளவும் ராஜேந்திர சோழன் உரிமை கொடுத்திருக்கிறான். அளவான வரி, அனைவருக்கும் அத்தியாவசிய வசதிகள், கரை புரண்டோடிய செல்வம்... என வளமும் நலமுமாக இருந்தது சோழ சாம்ராஜ்ஜியம்!''

''இப்போது அந்தச் செல்வங்கள் எல்லாம் எங்கே?''
''400 வருட பகைமையைத் தீர்த்துக்கொள்ள, பாண்டியர்கள் படையெடுத்து வந்து சோழர்களைத் தாக்கி ஒரு தூணும் நிற்கவொட்டாது இடித்து, கோவேறு கழுதை பூட்டி, பேய் கடுகு விதைத்து ஊரை நாசம் செய்தார்கள். பொன் பொருட்களை வாரிக்கொண்டு போனார்கள். அவை அடுத்த தலைமுறையிலேயே டெல்லியில் இருந்து வந்த இஸ்லாமிய தளபதியால் கொள்ளையடிக்கப் பட்டன. 36 யானைகள் முழுவதும் பொன், பொருட்கள் டெல்லிக்குக் கொண்டுபோகப்பட்டன. டெல்லியில் உள்ள ஆட்சியாளர்களை அடுத்த 120 வருடங்களில் ஆங்கிலேயர்கள் தாக்கி, அந்தப் பொன் பொருட்களை எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப் போனார்கள். இங்கிலாந்தின் பல சாலைகள், கட்டடங்கள் இந்தப் பொற்காசுகளால் நிர்மாணிக்கப்பட்டவை; தமிழக செல்வத்தால் வளர்ந்தவை!''

''பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் ஏன் பகை?''
''ஓர் இனம் மற்ற இனத்தால் அழிக்கப்படாது. எப்போதுமே ஓர் இனம் இரண்டாகப் பிரிந்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். தமிழ் பேசும் பாண்டியர்களைக் கடுமையாகத் தாக்கி தமிழ் பேசும் சோழர்கள் துன்புறுத்தினார்கள். கன்னியாகுமரி வரை துரத்தினார்கள். பனங்காட்டுக்குள் வாழச் செய்தார்கள். அதே பாண்டியர்கள் பல தலைமுறைகளுக்குப் பிறகு மிக வெஞ்சினத்தோடு, சோழர்களின் பல்வேறு பெருமைகளை அழித்தார்கள். மிகச் சிறந்த தமிழர் நாகரிகம் ஒன்று 10 சதவிகிதம் மட்டும்தான் பார்க்க, கேட்கக் கிடைத்தன!

இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் காஞ்சிபுரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் இறந்துபோனான். அவன் கடைசியாகத் தரிசித்த ஒரு கோயில் இருக்கிறது. சுற்றிலும் பனைமரங்கள்; பொட்டல்காடு. ஏன் அந்தக் கோயிலுக்கு வந்து இறந்துபோனான் என்று மனம் பதறுகிறது. 'இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்துவிட்டு, அங்கே அந்தச் சிறிய கிராமத்தில் இறந்துபோனாயே... ஏனப்பா?’ என்று அலறத் தோன்றுகிறது!''
- கம்மியக் குரலில் முடிக்கிறார் பாலகுமாரன்.

நன்றி : ஆனந்த விகடன் 

Friday 25 July 2014

16ஆவது அகவையில் சூரியன் FM


சூரியன் குழு

முதல் தரம்தான் தேவை என்று இலங்கையின் வானொலிகள் அனைத்தும் போட்டி போட்டு தங்களது சேவைகளில் பல பல புதிய செயற்றிட்டங்களை தொடர்ந்தும் உள் நுழைத்து வருகின்ற இக்காலகட்டத்தில், காலத்திற்கேற்ப தரமான இரசனை நிறைந்த நிகழ்ச்சிகளை, தேவையான நேரம் வழங்கி, பல கோடி வானலை நேயர்களை உறவுகளாக்கி அவர்களின் அன்போடு ஆண்டுகள் ஒன்றல்ல, இரண்டல்ல 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதற்தரமாக, வானலை வல்லரசனாக, முதற்தர வானொலியாக பண்பலையிலும் இணையத்திலும் பவனிவரும் சூரியன், இன்று ஜூலை 25ஆம் திகதியுடன் 16ஆவது சாதனை ஆண்டில் தடம் பதிக்கின்றான்.

வானொலி துறை சார்ந்த பல நட்சத்திரங்களை இன்று உலகளாவிய ரீதியில் உருவாக்கிவிட்ட பெருமையும் புகழும் சூரியன் வானொலியை சாரும் என்றால் அது மிகையாகாத உண்மை. இன்றைய காலகட்டத்தில் வானொலிகளின் பரிணாமங்கள் மற்றும் பரிமாணங்கள் சொல்லிலடங்காதவை. பண்பலைகளில் பவனி வந்த வானொலிகள் இப்போது சற்று அதனுடைய போக்கு மாறி இணையத்தினூடாக இணைய வானொலிகளாக பரிணமிக்க தொடங்கிவிட்டன. 

எவ்வாறு நோக்கினாலும், இவை அனைத்தும் சூரியன் வானொலியின் ஒருவகையான தாக்கத்துடன் தான் செயற்படச் செய்கின்றன. நமது வானலை அரசன் சூரியன் இப்போது பண்பலை மூலம் இலங்கை முழுவதிலும் இணைய வானொலியாக உலக நாடுகளிலும் அதிகமான இரசிகர்களைக் கொண்ட இணைய வானொலியாகவும் தெட்டத் தெளிவாகவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

சகோதர வானொலிகளான ஹிரு, ஷா, ஆங்கில வானொலிகளில் இலங்கையிலே முதற்தரமான Gold FM போன்றவற்றுடன் தொலைகாட்சியையும் தன்னகத்தே கொண்டுள்ள ஆசிய ஊடக வலையமைப்பின் தமிழ் வானொலியாக 1998ஆம் ஆண்டிலிருந்து திறமைமிகு, தன்னுடைய கடின உழைப்பின் பயனாக நாட்டின் பலம் பொருந்திய நிறுவனங்களுள் ஒன்றாக தடைகள் பல தாண்டியும், தளராத உறுதிமிகு மனதுடன் ரெய்னோ சில்வா வழி நடத்திச்செல்ல, சூரியன் வானொலியை, சூரியன் உச்சம் தொட, சூரியன் முதற்தரம் என்ற நாமம் பெற, தற்போதைய வானலைகளில் முன்னணி அறிவிப்பாளர்களை உருவாக்கிவிட்ட, காலை நேர நிகழ்ச்சிகளின் கதாநாயகன், பல விடயங்களிலும் வானொலி துறையிலும் அனுபவம் கொண்டு, தனியார் வானொலிகளில் பல புதுமைகளைப் புகுத்திய A.R.V. லோஷனின் சிறப்பான, துல்லியமான வழி நடத்தலுடன் சூரியன் வானொலியின் வெற்றிப்பயணம் தொடர்கிறது...

சூரியனின் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி திறமைகளைத் தன்னகத்தே கொண்டு பல புதுமைகளை வானலையில் புகுத்தி, மக்கள் மனங்களில் இன்னும் நீங்காத கதாநாயகர்களாக திகழ்கின்றார்கள். அவ்வாறாக தனது நகைச்சுவையான பேச்சாற்றல், சிறப்பான நிகழ்ச்சி வடிவமைப்பு, பல வானொலிகளில் இன்று சில நிகழ்ச்சிகள் இவருடைய தயாரிப்புகளின் கொப்பி என்று சொன்னால் யாரும் மறுக்க முடியாது. இவற்றையும் விட விளம்பர கோர்ப்புகள், என பல திறமைகளைக் தன்னகத்தே கொண்ட இசைச்சமர் கதாநாயகன் சந்ரு, சூரியனின் சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளராக தன்னுடைய சேவையை வழங்குகிறார்.
இவர்களுடன் தன்னுடைய இனிமையான குரலால் பல உள்ளங்களை வசீகரித்து 'யாரு பேசுறீங்க' என்ற நிகழ்ச்சியூடாக பலரை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவர்களைக் குழப்பி சிறந்த நகைச்சுவையுணர்வை தூண்டும் நிகழ்ச்சியைத் தருபவர், மாலை வேளையின் மன்னன் தன்னுடன் பழகும் அனைவருக்கும் மாலை போடக்கூடிய (மாலையின் ரகசியம் ஒரு சிலருக்கு தான் தெரியும்) அலுவலகத்தில் இருக்கும் நேரம் அனைவரையும் கலகலக்க வைக்கும் ஒருவர், அவர் தான் DJ டிலான், உதவி முகாமையாளராக செயற்படுகிறார். 

பெருமை மிகு 16ஆவது ஆண்டில் கால்பதித்த சூரியன் வானலையில் அதிகாலை வேளையில் ஆனந்தமாய் நாள் ஆரம்பத்தில் பொழுது விடியும் பொழுதிலே, உறவுகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி, மனதுக்கு இனிமைத் தரும் பாடல்களுடன் சூரியன் தன்னுடைய கதிர்களை அருணோதயம் நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கின்றான். றிம்ஷாட் மற்றும் பிரஷா ஆகியோரின் குரலுடன் உதயமாகிறது அன்றைய நாள்...

புதிய நாளில் புது தகவல் கேட்க, நாட்டு நடப்புகளை நன்கறிந்துக்கொள்ள, சூரியனின் Super Sports கேட்க, பேப்பர் பொடியனின் நகைச்சுவையான நக்கல் உரையாடலுடன், தென்னிந்திய பிரபலங்களின் உள் மன குமுறல்களை கிளறிக்கொட்டுவதுடன், காலைக்கு தேவையான மூளைக்கான பலமாக வருகிறது சூரிய ராகங்கள். சூரியனின் பணிப்பாளர் A.R.V. லோஷனுடன் மனோஜ் சிறப்பாக தொகுத்து வழங்க, அறிவு வளம் பெருகும் காலையாக புதிய நாள் ஆரம்பமாகிறது.

ஒவ்வொரு நாளும் சிரிக்க வேண்டும், அதுவும் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்களே, அதேபோல் சிரிக்க குதூகலமாய் நிகழ்ச்சி கேட்க, நகைச்சுவை பேச்சாற்றலால் நல்ல நிகழ்ச்சியை வழங்கும் சூரியனின் சிரேஷ்ட முகாமையாளர் சந்ருவுடனும் மேனகாவுடனும் இசைச்சமர் வெற்றிநடை போடுகிறது.

இசைச்சமர் ஓயும் நேரம் மதிய பொழுதை அட்டகாசமாக ஆரம்பிக்க, இனிய பாடல்கள்தர உறவுகளுக்கு வாழ்த்துக்களையும் சொல்ல, அலுவலக கடமைகளின் ஓய்வு நேரத்தின் உற்ற தோழனாய் ஓங்கி ஒலிக்கிறது, மதிய நேர இசை விருந்து, நிஷாந்தன் மற்றும் வர்ஷி ஆகியோர் நிகழ்ச்சியை தருகின்றனர்.

மாலை வேளையின் ஆரம்பமாக உலகின் புதினமான தகவல்களை அள்ளிக்கொண்டு, ஏனையோரை முந்திக்கொண்டு மனம் கவர்ந்த பாடல்களுடன், விளையாட்டு தகவல்கள், சினிமா, அரசியல், தொழில்நுட்பம் என சகல அம்சங்களையும் உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சியாக 'கும்மாளம்' ஒலிக்கிறது. இதனை தரணீதரன் மற்றும் பிரவீனா சிறப்பாக மற்றும் தெளிவாக தருகிறார்கள்.

அலுவலக கடமைகளை முடித்துக்கொண்டு பயணம் செய்வோரின் மனங்களை மகிழ்விக்க, கலகலப்பான மாலை வேளையை அலங்கரிக்கும்படி இனிய புதிய பாடல்களைக் கேட்க 'யார் பேசுறீங்க' பகுதியினூடாக பல இரசிகர்களைக் கலகலப்பாக்கி அவர்களையும் மகிழ்விக்கும் சூரியனின் உதவி நிகழ்ச்சி முகாமையாளர் டிலான் மற்றும் கோபிகா ஆகியோரின் 'என்றென்றும் புன்னகை' எல்லோரையும் புன்னகைக்கச் செய்யும் இரவு 8.45 வரை.

காதல் கீதங்களுடன், மனதுக்கு இனிமையான இடைக்கால பாடல்களின் பயணம், பல கவிஞர்களை உருவாக்கிவரும் நிகழ்ச்சி, உழைத்து களைத்த உள்ளங்களுக்கு ஓர் இரவுமருந்து - சூர்யா தொகுத்தளிக்கும் 'நேற்றைய காற்று' நள்ளிரவு 12 மணிவரை தாலாட்டு பாடுகிறது. 

அதிரடியான ஆட வைக்கும் பாடல்கள் தர சூரியனின் விடிய விடிய இரவுச் சூரியன், இரவு நேர வேலையாட்களை மகிழ்விக்கிறது. அவர்களின் உற்ற தோழனாக விடிய விடிய இரவுச் சூரியன் தனது பங்களிப்பை வழங்குகிறுது. ரமேஷ், பிரஷாந்த், கஸ்ட்ரோ, லரீப் ஆகியோர் ஆடல் பாடல்களாக குதூகலிக்க வைக்கிறார்கள்.

உலகில் எந்த மூலையில் என்ன விளையாட்டுக்கள் நடந்தாலும், உடனுக்குடன் தெட்டத் தெளிவாக உண்மையான தகவல்களை அள்ளித்தர சூரியனின் 'வெற்றி நடைபோடும் விளையாட்டுச் செய்திகள்' என தினமும் தகவல்களைத் தர சனிக்கிழமை பொழுதின் மாலைவேளை முழுமையான விளையாட்டு நிகழ்ச்சியாக 'அட்டகாசம்' வருகிறது. புது புது தகவல்களை தரணீ தொகுத்து வழங்க, காலை நேரத்தின் விளையாட்டு தகவல்களை சூரியனின் சூடான விளையாட்டுத் தகவல்களை, கிழமை நாட்களில் A.R.V. லோஷன் தொகுத்தளிக்கிறார்.


இவ்வாறாக சூரியனின் தொடரும் சாதனைப் பயணத்தில் மணிவண்ணன், மயூரன், ராகவன், வேணி, பிரசாந்தா ஆகியோர் தமது தனித்துவமான செய்தி வாசிப்பினால் நேயர்களின் நெஞ்சங்களில் தமக்கென தனித்துவமானதோர் இடத்தினை பிடித்துள்ளதோடு, வார இறுதி நாட்களில் பல சிறப்பான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகின்றனர்.

சூரியன் செய்திப் பிரிவு

சூரியன் ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை அனைவர் மத்தியிலும் சிறந்து வரவேற்பு பெற்றது சூரியன் செய்திகள் என்றால் அது மிகையாகாது. செய்தி பிரிவின் சிரேஷ்ட முகாமையாளராக இந்திரஜித் செயற்பட சிரேஷ்ட செய்தி ஆசிரியராக V.S.சிகாமணி, சதீப்குமார், விக்னேஷ்வரன், கிருஷ்ணகுமார், நாகவாணி ராஜா ஆகியோர் சூரியன் செய்தி பிரிவில் தங்களுடைய வேலையை சிறப்பாக வழங்குகிறார்கள்.

இதேபோல சூரியனின் புது மெருகு பெறும் நிலையக்குறியிசைகளை புதிய மெட்டுக்கள், ரசனையான இசைக்கோர்வைகளுடன் தந்து அசத்திக்கொண்டிருக்கும் இசைக் கோர்ப்பாளர் ஹனி நயாகராவும் சூரியக் குழுவின் முக்கிய அங்கத்தவர்களில் ஒருவர்.

அதேபோல் சூரியன் பல சாதனைகளைத் தொட, சூரியனின் பல வெளிக்கள நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி அவை அனைத்திலும் சாதனை படைக்க முக்கிய காரணமாக இரவு - பகல் பாராது உழைத்துக்கொண்டு, சூரியனின் வளர்ச்சிக்கு தூண்டு கோலாக சூரியனின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவினர் செயற்படுகின்றனர். 


கள்ளமனத்தின் கோடியில் என்ற நிகழ்ச்சியினூடாக பல தென்னிந்திய நட்சத்திரங்களை சந்திக்க சூரியனின் பிரம்மாண்டமான Mega Blast இசை நிகழ்ச்சிக்கும் பெரும் பங்கு வகிக்கும் அஷ்ரப், சூரியனின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளராக பணியாற்றுகிறார். உதவி முகாமையாளராக  அஜித்குமார் மற்றும்  கார்த்திக், பாரி, சுரேன் ஆகியோரும் இன்னும் புதியவர்கள் பலரும்  சூரிய குழுவுடன் இணைந்து சூரியன் வானொலி விண்ணைத் தொட்ட சாதனைப் பயணத்தில் கரம் கோர்க்கிறார்கள்.

வானொலி வரலாற்றில் இணையத்தளத்திலும் தனது கைவரிசையைக் காட்ட தொடங்கியுள்ளான் முதல்வன். சமூக வலைத்தளமான சூரியனின் பேஸ்புக் பக்கத்திலும் இலங்கையின் ஏனைய வானொலிகளும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு 3 லட்சத்துக்கும் அதிகமான இரசிகர்களை உள்ளடக்கி மாபெரும் சாதனையை படைத்துள்ளமை, சூரியன் ரசிகர் மட்டத்தில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறது. 

வெறுமனே ஒலிபரப்புத்துறை சார்ந்த விடயங்களில் மட்டுமல்லாது சமூக சிந்தனையுடன் பல சமூக நலத் திட்டங்களையும் வெற்றிகரமாக முதல்வன் சூரியன் முன்னெடுத்து மாபெரும் சாதனையை படைத்துள்ளான். சமூக அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுகளை வழங்கியமை மட்டுமல்லாது, இன்று வரைக்கும் சமூக சேவைகளிலும் தன்னுடைய முழுமையான பங்களிப்பை தன் அன்பு நேயர்களின் முழு உதவியுடன் மேற்கொண்டு வருகிறான். எமது நாட்டில் மட்டுமல்லாது, தெற்காசியா போன்ற இடங்களிலும் சிறந்த வானொலியாக பல விருதுகளைப் பெற்ற ஒரே ஓர் இலங்கையின் தமிழ் வானொலி சூரியன் மட்டுமே. அதேபோல் இரசிகர் மன்றங்கள் சூரியன் வானலைக்கு ஏராளம், எமது நாட்டில் மட்டுமல்லாது, எம் உறவுகள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் தனக்கான தனி இடத்தை ரசிகர் மன்றங்களினூடாக அதிகரித்திருக்கிறான். 

இவ்வாறாக சூரியன் வான் அளவு ஓங்கியுள்ளது என்றால் அதற்கு முழுக்காரணமும் சூரியன் பண்பலையை நேசிக்கும் அதன் உண்மையான இரசிகர்களையே சாரும். அதனையே சூரியக் குடும்பமும் எப்போதும் நினைவுபடுத்துகிறது. இவ்வாறாக தன் குடும்பத்தில் ஓர் உறவுபோல் சூரியன் வானலையை போற்றும், நேசிக்கும் யாரும் அசைக்க முடியாத அன்பு நேயர்களின் முழுமையான பங்களிப்போடு, தொடரும் ஆண்டுகளிலும் முதல்வனின் முத்தான சாதனைப் பயணம் முதற்தரமாக இன்றுபோல் என்றும் மாறாமல் தொடரும் என்பதில் ஐயமில்லை.


16 வது அகவையை நிறைவு செய்து 17 வது அகவையில் கால்பதிக்கும் "சூரியன் " பன்பலைக்கு "சிகரம்" குடும்பம் சார்பாகவும் இனிய வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

-சிகரம்-

Thursday 24 July 2014

காயங்கள் தான் என் கௌரவங்கள் - மு.மேத்தா

 



          பெரிய குளத்தின் பீடுமிகும் கவிஞரே! உங்கள் இளம்வயதின் நினைவுகளை எங்களுக்குச் சொல்வீரா?
"வாழ்வில் நான் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் அவைதான். புழுதியில் புரண்ட பூக்களாக நாங்கள் இருந்தோம். அற்புதமான நல்ல நண்பர்கள்  எனக்கு வாய்த் திருந்தார்கள். சிறகு முளைக்கும் முன்னே வானில்  பறந்த பறவைகளைப்போல், எதுவும் அறியும் முன்னே நாங்கள் இலக்கியம் படைக்க ஆரம்பித்தோம். அந்த வயதில்தான் நான் அதிகம் படித்தேன்.  அரசியல் மேடைகளில் இளைய கதாநாயகனாக உலாவந்தேன். பெரியகுளம் விக்டோரியா நினைவு கழக உயர்நிலைப் பள்ளியில் மாணவர் தலைவனாக பதவியில் இருந்தேன்.

அங்கே ஒரு மந்திரிசபை அமைத்தோம். மாணவர் தலைவர்தான் முதலமைச்சர். என் வாழ்வில் என் தந்தை எனக்குக் கொடுத்ததுதான் அதிகம். கேட்டது எதுவுமில்லை. பள்ளியில் நான் மந்திரிசபை அமைத்தபோது அவர் என்னிடத்தில் ஒரு வேண்டுகோள் வைத்தார். எங்கள் குடும்ப வைத்தியரின் மகனை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். என் சகாக்களிடம் யோசித்துவிட்டுச் சொல்வதாக சட்டாம்பிள்ளைத்தனமாகச் சொன்னேன். இறுதியில் என் நெஞ்சில் நிறைந்த  தந்தையின் வேண்டு கோளை நிராகரித்தேன். சின்ன வயதிலேயே நேர்மைத் தராசை கையில் தூக்கிக்கொண்டு நடந்தேன். இன்றுவரை அந்தத் தராசை கீழே போட எனக்கு மனம் வரவில்லை. அதனால் தான் சில சமயங்களில் நானே கீழே விழுந்து நொந்துபோக நேர்கிறது. ஆனால் அந்த காயங்களைத்தான் என் கௌரவங்கள் என்று கருதுகிறேன். எனக்கு வாய்த்த என்னுடைய நண்பர்களான ஆறுமுகம், முகமதுமைதீன், ஆறீஸ்வரன், வேலுச்சாமி, சிவஞானம், சிவநேசன், பாலகுமார் போன்றோர் லட்சியத்தோடு நான் வளர்வதற்கு உரமாக நின்றார்கள். வழிமாறாமல் உயர்வதற்கான வாய்ப்பை அவர்கள் வழங்கினார்கள். இன்னும் பகிர எவ்வளவோ இருக்கின்றன.''

"ஈர விழிக் காவியங்கள்' எழுதி வெளியிட்டவரே!
எழுதி வெளியிட்டதனால் எவர் மனதைத் தொட்டீர்கள்?
" இன்று ஏராளமான கவிதைகளை எழுதும் இளைஞர்களையும் அவற்றை வாசிக்கிற மூத்தவர்களையும் தொட்டேன். அவர்கள் நெஞ்சில் வேர்விட்டேன்.''


மரபுக் கவிதைகளால் மனம் மகிழ்ந்த நாயகரே!
புதுக்கவிதைக் காதலியைக் கரம்பிடித்ததெதனாலே?
"சமூகத்தில் குமுறல்களை வெளிப்படுத்த வேலியில்லாத ஒரு இலக்கிய வடிவம் தேவைப்பட்டது. சுவரேறிக் குதிப்பதற்கு பதிலாக சுவர்களைத் தகர்த்து விட்டு வானம்பாடிகளாய் நாங்கள் நடக்கத் தொடங்கினோம். "சொற்புதிது பொருள் புதிது வளம் புதிது ஜோதிமிக்க நவ கவிதை' என்று பாரதி பாடினானே, அவற்றைப் படைப் பதற்கு புதுக்கவிதை வாகனத்தில் பயணம் செய்தோம்.''

அழகுத் தமிழுக்கு ஆணிவேர் ஆனவரே!
உங்கள் தமிழுக்கு உயிர்வேராய் இருந்தவர் யார்?
"இளங்கோவும் வள்ளுவனும் கம்பனும் துருவ நட்சத்திரங்களாய் எனக்குத் திசைகாட்டினார் கள். பாரதியும் பாரதிதாச னும் எனக்குள் இசை மீட்டினார்கள். ஏழை எளிய மனிதர்கள் எனக்கு கவச உடை பூட்டி, தங்களுக்காகப் போரிட களத்தில் நிறுத்தினார்கள். கவிஞர் சிற்பி என் னைப் பற்றி இப்படி குறிப்பிடு வார்... "சமூகமே இக்கவிஞரின் ஆலயம். அதன் போர்க்களமே இவரின் கீதலயம்.''

கவிதைக்கு அழகு கற்பனையா?
இல்லை பூவுக்குள் தேன்போன்ற பொருளடக்கம் தானா?

"பூவுக்குள் தேன்போன்ற பொருளடக்கம் தான் எந்த இலக்கிய வடிவத்தையும் எழுச்சி பெறச் செய்கிறது. வண்டுகளாய் மட்டுமே சுற்றித் திரியாமல் வாள்களாகவும் வேல்களாகவும் மாறவேண்டிய கட்டாயத்தை வாழ்க்கை தீர்மானிக்கிறது.''

காதலே இல்லாத உலகத்தில் சில நாட்கள்
வாழச் சொன்னால் வாழ்வீரா சொல்லுங்கள்?
"வாழ்வேன். இதோ இப்போது உங்கள்முன் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறேன். வெறும் வியாபாரிகளுக்கு மத்தியில் படைப்பாளிகளும் வாழத் தானே வேண்டியிருக்கிறது. மூச்சு நின்றுவிட்டால் பேச்சு நின்றுவிடும். அதுவரை பேசாதிருக்க இயலுமா?''

இந்த உலகை இயக்கும் சக்தி எதனிடம் உள்ளது? எடுத்துச் சொல்லுங்கள்?
"உழைப்பிலும் இளைஞர்களின் உணர்விலும் உள்ளது. அதை உருவாக் கும் சக்தி, எந்த பேரங்களுக்கும் இடம்கொடுக்காத எழுதுகோல்களில் உள்ளது.''

யுத்தக் களத்தில் வென்றவர்கூட
முத்தக் களத்தில் தோற்பது எதனால்?
"யுத்தக் களத்தில் எதிரி யார் என்பது தெரிகிறது. முத்தக் களத்தில் காதல் எது- மோதல் எது என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.''

மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் நீங்கள்
யாராகப் பிறக்க ஆசைப் படுவீர்கள்?
"இதில் நான் பிறவாமை வேண்டும் என்று கூறிய பெரியார் கட்சி.''

மனது நிரம்புவது மரபிலா? இல்லை
புதுக்கவிதை எழுதும் பொழுதிலா? சொல்லுங்கள்!
"கோப்பை நிரம்புவது வெந்நீரிலா தண்ணீரிலா என்று கேட்பதைப் போன்ற கேள்வி இது. மரபோ புதிதோ அது கவிதையாக இருக்க வேண்டும் என்பதுதான் நியதி. மரபிலும் நல்ல கவிதைகள் உண்டு. புதுக்கவிதையிலும் வெறும் வசனங் கள் வந்துவிடுவதுண்டு. நல்ல கவிதைக்கு வடிவம் முக்கியம். இரண்டிலும் அது இருக்கும். அல்லது இல்லாமலும் இருக்கும். கூட்டம் சேர்ந்து கொண்டாடுவதையெல்லாம் சிறந்தது என்று கூறமுடியாது. அடடா என்று எது நம்மை மறந்து ஆனந்தமாய் அலற வைக்கிறதோ- அது நம் மனதை நிரப்பிவிட்டது என்று அர்த்தம்.?''

சிறகு முளைத்த எழுதுகோல் கொண்டவரே!
உங்கள் வானம் காதலா? சமூகமா?
"சமூகத்தின்மீதான காதல்.''

தலைநரைக்கும் வயதிலும் உங்கள் எழுத்து இளமையாக இருக்க என்ன காரணம்?
"இதயம் எப்போதும் இளமை யாகவே இருக்கிறது. ஒரு முடி நரைக் கும்போது உள்ளுக்குள் புதிய பூக்கள் ஏராளமாய்ப் பூக்கின்றன. அவை முடிசூடிக் கொள்வதால் நாம் அகதி ஆவதில்லை. நம் எழுத்துக்கு அகவை யும் ஆவதில்லை.''

மரபில் உங்கள் மனம்கவர்ந்த கவிஞர்கள் யார்? பட்டியலிட்டுப் பதமாகச் சொல்லுங்கள்...
"நான் வாழும் காலத்தில் என்னோடு வாழ்ந்த, வாழ்கின்ற கவியரசர் கள் மீரா, ரகுமான், பாலா, சிற்பி, இன்குலாப், சேலம்  தமிழ்நாடன் இன்னும் பலர். பட்டியல் கொடுக்க நான் விரும்பவில்லை.''

தித்திப்புத் திரையுலகில் திருக்கவியே
நீங்கள் நுழைந்த தருணத்தை விரிவாகச் சொல்லுங்கள்...
"தற்செயலாய் நேர்ந்ததுதான் என்னுடைய திரைப்பயணம். என்னோடு தியாகராயர் கலைக்கல்லூரியில் படித்த நண்பர் சுப்பிரமணியன் அவர்களுடைய தந்தை, தென்தமிழ்நாட்டு நாடக உலகில் புகழ்பெற்ற உடையப்பா ஆவார். "அனிச்சமலர்' என்று அவர் ஒரு படம் எடுத்தார். படிக்கும்போதே அவர் என் பாட்டுப் பணிகளை அறிந்தவர். ஆதலால் அவருடைய படத்தில் முதல் பாடலையே நான்தான் எழுதவேண்டும் என்று அழைத்தார். ஆளுயர ரோஜாப்பூ மாலையோடு வாசலில் நின்று வரவேற்று என்னை அழைத்துச் சென்றார்.

இசையமைப்பாளர்களான சங்கர்- கணேஷ் இருவரிட மும் இவர்தான் எங்கள் கவிஞர் என்று அறிமுகப்படுத்தினார். அதில் முதல் பாடலை எழுதியதற்குப் பிறகு திரைப்பட உலகை நான் திரும்பிப் பார்க்கவே இல்லை.

எழுத்தாளர் பாலகுமாரன் என்னிடம், "கலைஞானி கமல்ஹாசன் அடிக்கடி உங்கள் கவிதைகளைப் பற்றிப் பேசுகிறார். அவரைச் சந்தித்தால் புதுப்பட வாய்ப்புகள் ஏராளமாய்க் கிடைக்கும்' என அடிக்கடி சொல்லிக் கொண் டிருந்தார். திரையுலகைப் பற்றி பெரிதாக கனவொன்றும் எனக்கு இல்லாததால் அவருடைய அழைப்பினை நான் ஏற்காதிருந்தேன். என்னுடைய ரசிகர்கள் ஏன் நீங்கள் திரைப்படங்களில் எழுதவில்லை என்று என்னைக் குற்றக் கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். வேறுவழியில்லை; நானும் சினிமாவில் பாடல்கள் எழுதியாகவேண்டும். இல்லா விட்டால் அவர்கள் ஏற்கெனவே எனக் குக் கொடுத்திருக்கும் "கவிஞர்' என்ற பட்டத்தைப் பறித்துக் கொள்வார்கள் என்று தோன்றியது. எனவே கமலைச் சந்திக்க சம்மதம் சொன்னேன்.

பாலகுமாரன் மூலம் சந்திப்பு நிகழ்ந்த போது கலைஞானி கமல்ஹாசன் அவர்கள், எனக்கு சில உண்மைகளை உணர்த்தினார். "உங்கள் இலக்கியத் தமிழை நான் மதிக்கிறேன். ஆனால், திரைப் படவுலகம் பெரும் வல்லமை மிக்கது. ஒரு படைப்பாளி அந்த ஊடகத்தையும் பயன்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். உங்கள் கவிதை லட்சம்பேரைச் சென்றடையும் என்றால், நீங்கள் எழுதும் திரைப்பாடல் கோடிக்கணக்கானவர்களை உடனடியாக ஓடிப்போய்த் தொட்டுவிடும்' என்று உபதேசித்து என்னை இயக்குனர் மனோபாலாவிடம் அழைத்துச் செல்லச் சொன்னார்.

இயக்குனர் மனோபாலா அப்போது "ஆகாயகங்கை' என்ற திரைப்படத்தைத் தொடங்கியிருந்தார்.  அவர் என்னை பிரசாத் ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்று இசைஞானி இளையராஜாவின் முன்பு உட்கார வைத்து இவர்தான்

மு. மேத்தா என்றார். படித்திருக்கிறேன் என்று புன்னகைத்த இளையராஜா, பாடல் எழுதும் வாய்ப்பை எனக்கு வழங்கத் தொடங்கினார். அதன்பிறகு ஏராளமான படங்களில் எழுதினேன்.''

நீங்கள் எழுதிய திரையிசைப் பாடல்களில்
உங்களைக் கவர்ந்த ஒரு பாட்டைச் சொல்லுங்கள்?
"உங்கள் குழந்தைகளில் உங்களுக்குப் பிடித்த குழந்தை எது என்று கேட்பதைப் போன்ற கடினமான கேள்வி இது. சில பாடல்களை வேண்டுமானால் நினைவுபடுத்தலாம். இசை ஞானி இளையராஜா இசையில் ரஜினி நடிக்க, பாலசந்தர் தயாரித்த "வேலைக்காரன்' படத்தின் ஒவ்வொரு பாடலும் என் உள்ளத்தில் ஈரமாய் ஒலிக்கிறது. "இரட்டைவால் குருவி' படத்தில் பாலுமகேந்திராவின் பார்வையில் "ராஜராஜ சோழன் நான்' என்ற பாடல் என் இதயத்தைத் தாலாட்டுகிறது. "சூரியவம்சம்' படத்தில் "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது' எனக்குள் அருவியாய் விழுகிறது. "பாடுநிலாவே' என்று என்னுள் "உதய கீதம்' கேட்கிறது. "யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ?' என "இதயக் கோயில்' என்னுள் எட்டிப் பார்க்கிறது.

"என் மனவானில் சிறகைவிரிக்கும் வண்ணப் பறவைகளே' என்று "காசி' யின் குரல் இதயத்தைத் தித்திப்பாய் தீண்டுகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி நண்பர்களோடு சேர்ந்து நான் தயாரித்த "தென்றல் வரும் தெரு' என்ற படத்தின் பாடல்கள், எங்களையும் சொல்லக்கூடாதா என்று ஏக்கத்தோடு கேட்கின்றன. வரிசைப்படுத்த முடியவில்லை. நான் எழுதிய பாடல்கள் எல்லாமே என் இதயத்தில் ஏறி, ரங்கராட்டினம் சுற்றுகின்றன.''

எதைநோக்கி உங்கள் இலக்கியப் பயணம்?
அதை எமக்கின்று அறிவிப்பீரா?

""என்னை நோக்குகிறவர்களை நோக்கி.''

இன்றைய இலக்கிய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது எதுவோ?
"எழுது எழுது எழுது என்று உங்கள் இதயத்திற்குள்ளே ஓங்கி ஒலிக்கும் குரல் கேட்டால் எழுதுங்கள். எழுதவேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள். எழுதுவதைவிட வாழ்வது இனிது. வாழ்வதைவிடவும் பிறரை வாழவைப்பது இனிது. இனிமையாய் இந்த சமூகத்தை வாழவைக்க நீங்கள் எழுதுங் கள். உங்கள் எழுத்துகளைப் பற்றி நீங்களே பேசாதீர்கள். சக்தி இருந்தால் உங்கள் எழுத்துகளே உங்களைப் பேசும். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். மாமன்னன் ராஜராஜசோழனின் முகம் எந்த புகைப்பட ஆல்பத்திலாவது இருக்கிறதா இப்போது? எந்தப் புகழும் நிலையானதல்ல. இதை மனதில் நிறுத்துங்கள்.''

பிறப்பெனப்படுவது?
"சிறப்புகள் அடைவது.''

வாழ்வெனப்படுவது?
"வறுமையை வெல்வது.''

இறப்பெனப்படுவது?
"இனியதில் இனியது.''

சந்திப்பு: அமுதா தமிழ்நாடன்

நன்றி : நக்கீரன் - 01-08-2012

Wednesday 23 July 2014

இனி இவர்தான் சிவாஜி!

நடிகர் சிவாஜி நினைவுகள்...

* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!


* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

 

 ********

பிறப்பு: 1 அக்டோபர் 1927
பிறந்த இடம்: விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: 21 ஜூலை 2001
தொழில்: நடிகர், அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு:
சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.

Sivaji-Ganesan 

ஆரம்பகால வாழ்க்கை
சிவாஜி கணேசன் அவர்கள், தனது இளம்வயதிலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாலும், அதில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்ததாலும், தனது கனவினை நிறைவேற்ற ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தார். பின்னர், அவரது சொந்த அம்மாவே நாடகக் குழுவில் இடம் பெற உதவி செய்தார். சிவாஜி கணேசன் அவர்கள், கமலா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்களும் உள்ளனர்.

திரையுலக வாழ்க்கை:
திரையுலகுக்கு வரும் முன், நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசன் அவர்கள், ‘இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் மூலமாக மிகவும் பிரபலமானார். இதில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின், நடிப்புத் திறமையைத் தந்தைப் பெரியார் அவர்கள் பெரிதும் பாராட்டினார். அவர், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். இந்நிகழ்ச்சியே, அவருக்கு ‘சிவாஜி கணேசன்’ என்ற பெயரை நிலைக்கச் செய்தது.

தமிழ்த் திரையுலகில், ‘பராசக்தி’ என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அவருக்குத் தெளிவான, உணர்ச்சிப் பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால், ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்றும் மக்களாலும், திரையுலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.

அக்காலத்தில், தேசத் தலைவர்களின் பத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த முக்கிய நடிகர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன் அவர்கள். ‘இராஜராஜ சோழன்’ மற்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய திரைப்படங்களே இதற்கு சான்றாகும். ‘மனோகரா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்கள், இவரின் வீர வசனத்திற்காகப் பெயர்ப் பெற்றவை. ‘பாசமலர்’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் காணலாம். ‘கந்தன் கருணை’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பக்தித் திரைப்படங்களும் பெரிதும் பேசப்பட்டவை.

அரசியல் வாழ்க்கை
அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1961ல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார். பின்னர், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 1987ல் கட்சியை விட்டு விலகி, ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பெரும்நடிகராக இருந்தாலும், அவருக்கு அரசியலில் எம்.ஜி.ராமச்சந்திரன் போல செல்வாக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, தனது இறுதிக்காலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

விருதுகள்:
1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
1966 – பத்ம ஸ்ரீ விருது
1984 – பத்ம பூஷன் விருது
1995 – செவாலியே விருது (Chevalier)
1997 – தாதா சாகேப் பால்கே விருது
1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.

இறப்பு
தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.

********

நன்றி: விகடன் Facebook பக்கம்.
              culturalindia.net [ http://tamil.culturalindia.net/sivaji-ganesan.html ]

தகவல்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

-சிகரம்-

Tuesday 22 July 2014

கற்பிழந்தவள் !

வணக்கம் நண்பர்களே!

நான் எழுதிய கவிதைகள் அடங்கிய நூல் ஒன்றை விரைவில் வெளியிடும் எண்ணம் தற்போது சற்றே துளிர் விட்டிருக்கிறது. எனவே, அதற்கு முன்னோட்டம் பார்க்கும் விதமாக இதுவரை "சிகரம்" வலைத்தளத்தில் வெளியான கவிதைகளை வரிசைக்கிரமமாய் அவற்றுக்கான இணைப்புகளுடன் இங்கே தொகுத்திருக்கிறேன். ஒவ்வொரு இணைப்புகளையும் தவறாமல் படித்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிச் செல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த முன்னோட்ட முயற்சிக்கும் சரி, வெளிவரவிருக்கும் நூலுக்கும் சரி தற்போதைக்கு "கற்பிழந்தவள்" என்றே நாமமிட்டிருக்கிறேன். சரி, அதிகம் பேசாமல் கவிதைத் தொகுதிக்குள் நுழைவோம்.



01. நலம் தானா தோழர்களே?

02. வேலைக்கு போறேன்!.

03. குருவியின் பயணம்

04. நட்சத்திர நிலவுகள்

05. நீ-நான்-காதல் - 01

06. நீ-நான்-காதல் - 02

07. நீ-நான்-காதல் - 03

08. மறுபடியும் வருவேன்

09. கற்பிழந்தவள்

10. பிரிவோன்றே முடிவல்ல

11. காத்திருப்பு

உங்கள் அங்கீகாரத்திற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.பூச்செண்டோ கல்லடியோ எதற்கும் தயாராய் இருக்கிறேன். மனதில் பட்டதைச் சொல்லுங்கள். தவறிருந்தால் திருத்திக் கொள்கிறேன். சரியிருந்தால் மெருகேற்றிக்கொள்கிறேன்.




சிகரம் - 2013.09.15 - கற்பிழந்தவள்

இப்படிக்கு,
அன்புடன்,
சிகரம் பாரதி.

Monday 21 July 2014

முதலாம் மண்டேலா தினம்!

நெல்சன் மண்டேலா… ஜூலை 18, 1918-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள  முவெசோ என்ற ஊரில் பிறந்தார். முழுப் பெயர் ‘நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா’  ரோலிஹ்லாலா என்றால், தொல்லைகள் கொடுப்பவன் என்று அர்த்தம். இவரது தந்தை சோசா, பழங்குடி இன மக்களின் தலைவர்.

ஆடு மாடு மேய்த்துக்கொண்டே  குத்துச் சண்டையையும், பல்வேறு போர்க் கலைகளையும் பயின்றார். அவற்றை, ஆடு மாடு மேய்க்க வரும் மற்ற பிள்ளைகளுடன் பயிற்சி செய்வார். அப்போது ஏகப்பட்ட பழங்குடியினர் கதைகளைக் கேட்டு, தன் நாடு எப்படி ஆங்கிலேயர் வசம் போனது என அறிந்துகொண்டார்.


ஒன்பது வயதிலேயே தந்தையை இழந்தார். பின்னர் உறவுக்காரரான ஜோன்கின்தபா என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தன் இனத்திலேயே முதன் முதலில் பள்ளிக்குச் சென்ற மண்டேலா, படிப்பில் சுட்டியாக இருந்தார்.
ஜோன்கின்தபா இவருக்கும் இவரின் தம்பிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார். இதை விரும்பாத நெல்சன் மண்டேலா, வீட்டைவிட்டு ஓடிப்போய் சுரங்கத்தில் காவலாளியாகவும் தோட்டக்காரராகவும் வேலைபார்த்தார்.
நெல்சன் மண்டேலா, கல்லூரிக் காலத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ராணுவப் பிரிவை உருவாக்கினார். கல்லூரியில் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி, ஆயுதக் கலகம் விளைவிக்க முயன்றார். அதனால் கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டார்.
  
ஒரு வழியாக சட்டம் பயின்று முடித்தார். அப்போது கறுப்பின மக்களை அடக்கி ஆளும் தேசியக் கட்சி, தேர்தலில் வென்றதால், பல்வேறு போராட்டங்களில் கல்லூரித் தோழர்களுடன் ஈடுபட்டார்.  இலவசமாக சட்ட மையம் ஒன்றை ஆரம்பித்து, ஏழை மற்றும் அப்பாவிக் கறுப்பின மக்களுக்குச் சட்ட உதவி செய்தார்.

முதலில் அமைதி வழியில் செயல்பட்ட மண்டேலா, பிறகு ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்தார். அதனால், குற்றம்சாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் வழக்கு நடைபெற்றது. அப்போது பல மாறுவேடங்களில்  சுற்றினார். இங்கிலாந்து மக்களைப் ஃபிரான்ஸில் இருந்து காப்பாற்றிய நாயகன் பிம்பெர்னல் போல மாறுவேடம் பூண்டபோது, மக்கள் கறுப்பு பிம்பெர்னல் என அழைத்தனர்.


தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964 ஜுன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். 27 வருடங்கள் சிறையில் இருந்தார். உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இவருக்கு இல்லை.
இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது,  ‘மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. காந்தியின் சத்திய சோதனையைப் பொறுமையாக வாசித்தார். காந்தி மீது அபிமானம் ஏற்பட்டது. ‘எனக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்றார். 1990-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி கிளார்க் முயற்சியால் விடுதலை ஆனார்.

அரசாங்கத்துடன் நடந்த பல்வேறுகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, அனைத்து மக்களும் இணைந்து ஓட்டு அளிக்கும் முறைக்கு ஒப்புக்கொண்டனர். அப்போது நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஜனாதிபதி ஆனார்.  இவருக்கு 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ”நான் கறுப்பின மக்களின் விடுதலையை விரும்புகிறேன். அதே சமயம் வெள்ளையர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் வெறுக்கிறேன். நிறங்களைக் கடந்து மனிதர்களாக அன்பு செய்பவர்களாக என் நாட்டு மக்கள் திகழ வேண்டும்” என்றார் மண்டேலா.

********

தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவராகத் திகழ்ந்து மறைந்த நெல்சன் மண்டேலாவின் 96ஆவது பிறந்த நாள் கடந்த 18 ஆம் திகதி உலகெங்கும் 'மண்டேலா தின'மாகக் கொண்டாடப்பட்டது.

67 வருடங்கள் அவர் தங்களது நாட்டிற்கு சேவை செய்ததை நினைவு கூறும் விதமாக கடந்த ஐந்து வருடங்களாக லட்சக்கணக்கான மக்கள் அவரது பிறந்த நாளன்று 67 நிமிடங்கள் பொதுநல செய்கைகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு ஜோஹன்னஸ்பர்கிலும், நியுயார்க்கிலும் தொடங்கப்பட்ட இந்த பொதுநல நடவடிக்கைகள் இந்த ஆண்டு 126 நாடுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய நிகழ்ச்சிகள் பாரிஸ், நியுயார்க், டல்லாஸ், லண்டன், எடின்பரோ, லண்டன் போன்ற நகரங்களில் நடைபெற்றன. சீனாவில் அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியிடப்பட்டது. தென்னாப்பிரிக்க மக்கள் இந்த நாளை பள்ளிகளை சுத்தம் செய்வதில் தொடங்கி பெங்குவின் பறவையை தத்தெடுத்துக் கொள்ளுவது வரையிலான செயல்களில் ஈடுபட்டனர்.

அந்நாட்டின் அதிபர் ஜாகப் ஜுமாவும் மண்டேலா பிறந்த ஊரான முவேசொவில் உள்ள பள்ளி ஒன்றில் சுத்தம் செய்யும் பொறுப்பில் சிறிது நேரம் ஈடுபட்டார். மண்டேலாவின் பழங்குடிப் பெயரான மடிபா என்ற பெயரில் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் திட்டம் ஒன்றினை அறிவித்த அவர் இதன்மூலம் தங்களுடைய நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்துவதாகக் கூறினார். பத்திரிக்கை நிறுவனங்களும் தங்கள் தரப்பில் அநாதை இல்லங்களுக்கு உதவுவது, ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவது போன்ற பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தின.

இதுதவிர உணவு பாதுகாப்பும் மற்றொரு முக்கிய திட்டமாக இங்கு செயல்படுத்தப்பட்டது.மொத்த ஜனத்தொகையில் கால் பங்கு மக்கள் பசி, பட்டினியில் வாடுவதாக அறியப்படும் இந்த நாட்டில் பொதுமக்கள் காய்கறித் தோட்டங்களை உருவாக்கும் செயலிலும், இலவச உணவளிக்கும் திட்டங்களுக்கு உதவுவதிலும் ஈடுபட்டனர். உயர் குற்றங்களுக்குப் பெயர்போன இந்த நாட்டில் ஒருவர் சுய பாதுகாப்பு குறித்தும் 67 நிமிடங்கள் மற்றவர்களுக்கு இலவச பயிற்சிகளை அளித்தார்.

சர்வதேச அஞ்சலிகளில் கூகுள் நிறுவனம் பிரபலமான அதன் லோகோ [சின்னம்] வெளியீடு மூலம் மண்டேலாவை நினைவு கூர்ந்தது. அதுபோல் கிளாஸ்கோவில் நடந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றில் மண்டேலாவின் பேத்தி டுக்வினி மண்டேலா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

இதுதவிர பொதுமக்கள் சமூகரீதியாகத் தாங்கள் செய்யும் நல்ல செயல்களையும் இணையதளங்களில் குறிப்பிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர். அரசியல்வாதிகளும் ஊடக செய்திகளின் மூலம் தங்களின் சொந்த செல்வாக்கை உயர்த்திக்கொள்ள இத்தகைய நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

உலகெங்கும் முதல் மண்டேலா தினம் அனுசரிப்பு 
 நன்றிகள்:
18 & 19 / 07/2014.

Sunday 20 July 2014

சிகரம்: தேன் கிண்ணம் - நாளை நீ மன்னவன்

வணக்கம் வலைத்தள வாசகர்களே! உங்களை மீண்டும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. என் நெஞ்சம் தொட்ட காலத்தை வென்ற பாடலொன்றுடன் உங்களை சந்திக்கிறேன் .

சிரித்தது போதும் சிந்தியுங்கள் 
என்னை திறமை இருந்தால் சந்தியுங்கள் 
கலைத்துறை என்னை கண்டதில்லை
அதை கண்டவர் யாரும் சொன்னதில்லை
நாளை நீ மன்னவன் 
இந்த நாளில் நீ மாணவன் [நாளை]
ஞானதீபம் நாம் ஏற்றலாம் 
நல்ல பாதை நாம் காட்டலாம் [ ஞான]
 
முழுமையாகப் படிக்க:

சிகரம்: தேன் கிண்ணம் - நாளை நீ மன்னவன்:

Thursday 17 July 2014

தூறல்கள்: பேசத் தொடங்கிவிட்டோம்

உங்கள் பெண்களின்

தீட்டுத் துணிகளையும்

துவைத்துக்கொடுத்தோம்



நீங்கள்

எங்கள் பெண்களின்

நிர்வாணத்தையும் கிழித்தீர்கள்



அப்போது எங்களுக்குத் தெரியாது

கருத்த தோலே எங்களின்

கனத்த ஆடையென்று..........



முழுமையாக வாசிக்க:


தூறல்கள்: பேசத் தொடங்கிவிட்டோம்:



Tuesday 15 July 2014

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07


பகுதி - 01


 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01
பகுதி - 02 


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02

பகுதி - 03

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03

பகுதி - 04

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04

பகுதி - 05

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05 


பகுதி - 06
கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06 

பகுதி - 07

இரவு விழித்தெழும் முன்னரே நான் விழித்துக் கொண்டேன். அசதியில் சற்று தூக்கம் வந்தது. ஆனால் மனதின் எண்ண அலைகள் தூக்கத்தை வாரி இழுத்துச் சென்றுவிட்டன. திவ்யாவை முதன் முதலில் சந்தித்த போது இருவரும் காதல் வசப்படுவோம் என்று நினைத்துப்பார்த்திருக்கவில்லை. எங்களுடையது மிகவும் கண்ணியமான காதல். இதுவரை அவளைத் தொட்டதோ முத்தமிட்டதோ கிடையாது. பிரிவை சந்திக்க நேர்ந்த போது என்தோளில் சாய்ந்து அழுதாள் திவ்யா. அதுவே முதலும் கடைசியுமாய் எங்களின் ஸ்பரிசமாகிப் போனது. விடிய விடிய குறுஞ்செய்திகளும் விடிந்த பிறகும் தொலைபேசிக்குள்ளேயே தொலைந்து போவதும் எங்கள் காதலில் இருக்கவே இல்லை. ரகசிய இடங்களில் சந்தித்ததுமில்லை. அதனால் தான் கண்ணியமான காதல் என்றேன்.


 

திவ்யா என்னிலும் இரண்டு வயது இளையவள். அவளை முதன்முதலில் எங்கள் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் வைத்துத்தான் கண்டேன். எங்கள் வீட்டில் யாருக்கும் அந்த விழாவில் கலந்து கொள்ள முடியாததாலும் நான் பெரிய மனிதனாக இருந்ததாலும் (இருவது வயசுன்னா பெரிய மனுசன் தானே?) நான் அந்தத் திருமண நிகழ்வில் கலந்து 'சிறப்பிக்க' எனது நண்பன் சுசியுடன் சென்றிருந்தேன். பரிசு கொடுக்கும் நேரத்தில் சுசி காணாமல் போய்விட, நான் தனியாள் என்பதால் திவ்யாவின் குடும்பத்தினரோடு சேர்ந்து நின்று ஒளிப்படம் (Photo) எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது இருவர் கண்களும் மட்டும் சந்தித்துக் கொண்டன. திவ்யாவுக்கு அருகில் நான்.
 

சில நாட்கள் கழித்து அந்தத் திருமண ஒளிப்படத் தொகுப்பை (Wedding Photo Album) காண நேர்ந்த போது "ஜோடிப் பொருத்தம் சூப்பரா இருக்கு மச்சான்........" என்று சுசி உட்பட அங்கு குழுமியிருந்த நண்பர் வட்டம் முழுவதுமே என்னைக் கிண்டலடித்தது. எங்கள் உயர்தர வகுப்பின் முக்கால்வாசி நண்பர் கூட்டம் அப்போது ஊரிலேயே இருந்தது. இப்போது தான் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையில்..... சில நாட்களுக்கு அந்தக் கிண்டல் தொடர்ந்து கொண்டிருந்தது. அவள் மீது எனக்கு எந்தவொரு அபிப்பிராயமும் உடனே ஏற்படாவிட்டாலும் ஒரு பெண்ணைக் காதலிப்பது என்பது 'கௌரவமான' விடயம் என்பதால் நானும் கிண்டல்களோடு சங்கமமாகிப் போனேன்.
 

அந்த திருமண வைபவம் முடிந்து ஒரு பதினைந்து நாட்கள் இருக்கும். திவ்யா பாடசாலைச் சீருடையில் ஓரிரு புத்தகங்கள் மற்றும் சில எழுதுகருவிகள் சகிதம் பள்ளி மாணவியருடன் நடந்து செல்வதை எங்கள் 'உளவுத்துறை' அவதானித்து விட்டது. அடுத்த ஐந்து நிமிடத்தில் தலைப்புச் செய்தியுடன் விரிவான செய்திகள் என் கைப்பேசியின் சிணுங்கலைத் தொடர்ந்து 'ஒலி'பரப்பானது. அது உயர்தரப் பரீட்சைக் காலம். திவ்யா கல்வி கற்ற பாடசாலைக்கான பரீட்சை மத்திய நிலையம் (Examination Center) எங்கள் ஊரிலுள்ள எமது பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. முதல் நாளே 'உளவுத்துறை' இதை அறிந்து கொண்டதால் பரீட்சை நடைபெறும் அந்த ஒரு மாத காலம் என்பாடு படு திண்டாட்டமாக இருந்தது.
 

"உன் தேவதை உன்னைத் தேடி இவ்வளவு சீக்கிரம் வருவான்னு நாங்க எதிர்பார்க்கல மச்சான்....."
"டேய்......... சும்மா இருங்கடா. அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல......."

"அத நீ சொல்லக் கூடாது. நாங்க சொல்லணும்... இன்னிக்கு பகல் அவ பரீட்சை முடிஞ்சு வர்றப்ப நீ உன் காதலைச் சொல்ற........."

அதிர்ந்து போனேன் நான். 'என்ன............???? காதலைச் சொல்வதா? இவங்ககிட்ட அவள வச்சு கதை அளந்தது இப்படி வம்பாகும்னு தெரியாமப் போச்சே.........'

"அதெப்படிடா.....? இன்னிக்கே...??"

"சரி... நீ காதலெல்லாம் சொல்லவேணாம். எங்க முன்னாடி ஏதாச்சும் பேசு. அது போதும்........"

ஒருவன் சொன்னதை மற்றவர்களும் ஆமோதிக்க நான் தலையைக் கூட ஆட்டாமல் தீர்மானம் 'உளவுத்துறை ரகசிய அலுவலகத்தில்' நிறைவேற்றப்பட்டது. 'நானும் கொஞ்சம் நல்லவன் இல்லையா? அதனால எப்படியும் இன்னிக்கு அவள கலாய்ச்சு நாம யாருன்னு இவங்களுக்கு காட்டணும்.' என்று நானும் மனதுக்குள் தீர்மானம் பண்ணிக் கொண்டேன்.

***************************************************

என்னுடைய கைப்பேசி பாட ஆரம்பிக்க நினைவுகளின் ஜன்னல்களை அடைத்து விட்டு நிஜ உலகின் ஜன்னல்களை திறந்து வைத்தேன். அழைப்பில் சுசி.

"காலை வணக்கம் ஜே .கே ."

"காலை வணக்கம் சுசி"

"என்னடா பண்ற?"

"தூக்கம் வரலடா. உக்காந்து யோசிச்சிட்டிருந்தேன்...."

"இப்ப என்னடா யோசனை...?"

"உனக்கு ஞாபகமிருக்கா? நாம முதன் முதல்ல திவ்யாவகலாய்ச்சது...... என்னை அவளுக்கு பூ குடுக்க வச்சது........"

"...................."

"என்ன சுசி? மறந்துட்டியா?"

"எப்படிடா மறப்பேன்? பூ குடுக்க சொன்னதே நான் தானே.....?"


"ம்ம்ம்...... நெனச்சுப் பார்க்கும் போது மனசுக்குள்ள சின்னதா ஒரு சந்தோஷம்டா......"

"............. சரிடா...........கிளம்பத் தயாராகு......... நா இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வாறேன்........"

"சரி சுசி....."

அழைப்பைத் துண்டித்துவிட்டு நேரத்தைப் பார்த்தேன். காலை ஆறு மணி முப்பது நிமிடம். குளித்து முடித்து விட்டு அம்மாவின் தேநீரைப் பருகிக் கொண்டே உடை மாற்றிக் கொண்டேன். சரியாக ஏழேகாலுக்கு சுசி காருடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வீட்டில் அலுவலக விடயமாகச்
செல்வதாகக் கூறிவிட்டு இருவரும் காரில் ஏறி புறப்பட்டோம். மழைக்கும் ஏதோ சோகம் போலும். இரகசியமாய் அழுவது போல் இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. கார் சீறிப் பாய்ந்தது என் கேள்விகளுக்கான
விடைகளைத் தேடி........


**********


"கல்யாண வைபோகம்" தொடரினை "சிகரம்" வலைத்தளத்தில் தொடர...


பகுதி - 01




பகுதி - 02





 
 

"கல்யாண வைபோகத்தினை" இனிதே நடத்திட கைகோர்த்திடுங்கள் .

-இரு வீட்டார் அழைப்பு-