அன்பார்ந்த வலைப்பதிவர்களே! நீங்கள் நலமா? நலம், நலமறிய ஆவல். வலைப்பதிவுகள் ஆரம்பித்து சில காலங்கள் வரை ஆங்கில மொழியில் மட்டுமே வலைப்பதிவுகள் எழுதப்பட்டு வந்தன. பின்பு தமிழிலும் ஒரு சிலரால் வலைப்பதிவு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. தனியொரு முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட வலைப்பதிவுகள் Blogger சேவை கூகிள் உடன் இணைந்த பின்பு வேகமான வளர்ச்சியையும் பன்மொழி சார் ஆதரவையும் வழங்கின.
ஆரம்பத்தில் ஒரு சிலரே தமிழில் வலைப்பதிவுகளை எழுதி வந்தாலும் பின்பு வலைப்பதிவுத் துறை பிரபலமானதன் பின்னர் அந்த எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்தது. தமிழில் வலைப்பதிவர்களுக்கு தமிழ்மணம் , இன்ட்லி , தமிழ் 10 ஆகிய திரட்டிகளும் வலைச்சரம் போன்ற வலைப்பதிவுகளும் ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கி வருகின்றன. வலைப்பதிவர் சந்திப்புகள், வலைப்பதிவு மாநாடுகள் போன்றவை இன்னும் உறுதுணை புரிகின்றன.
தமிழில் காணாமல் போன திரட்டிகளும் வலைப்பதிவுகளும் ஏராளம். இன்னும் திரட்டிகளும் வலைப்பதிவுகளும் புதிது புதியதாய் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. வலைப்பதிவுகளை ஆரம்பிக்கும் ஒவ்வொருவரின் நோக்கங்களும் இலக்குகளும் மாறுபட்டவை. ஆகவே அவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் ஒன்றிணைக்க ஒரு தளம் தேவை. அந்த முயற்சியை யாரேனும் முன்னெடுத்தால் அதற்கு தக்க உதவிகளை வழங்க நாம் தயாராகவே உள்ளோம்.
சரி. இப்பதிவை எழுதுவதன் நோக்கத்தை தெரியப்படுத்த வேண்டிய தருணம் இது. நான் முதலிலேயே சொன்னது போல வலைப்பதிவுகளை ஆரம்பிக்கும் ஒவ்வொருவரின் நோக்கங்களும் இலக்குகளும் மாறுபட்டவை.அந்த இலக்குகளை நோக்கி ஒவ்வொருவரும் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு வலைப்பதிவரையும் அவரது பதிவுகளூடாக ஒரு அனுமானத்தின் அடிப்படையில் மதிப்பிட்டு வைத்திருக்கிறோம். தம்மைப் பற்றியோ அல்லது தமது அனுபவங்களையோ பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவர்கள் மிகக் குறைவு.
ஆகவே தான் "சிகரம்" வலைப்பதிவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை அல்லது சுயசரிதையை மட்டும் பகிர்ந்து கொள்ள ஒரு பொதுவான வலைத்தளம் ஆரம்பிப்பது தொடர்பில் சிந்தித்து வருகிறது. சிந்தனையோட்டத்தில் உள்ள இந்த திட்டம் குறித்து உங்களுடன் விவாதிக்கவே இப்பதிவு.
வலைப்பதிவு பின்வருமாறு அமையும்.

* துவங்கவிருக்கும் புதிய வலைப்பதிவானது உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் உங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் மட்டுமே உருவாக்கப்படுகிறது.
* ஒரே வார்த்தையில் சொல்வதானால் உங்கள் "சுயசரிதை"யை எழுதுவதற்கான களம் இது.
* ஒரு பதிவருக்கு அதிக பட்சம் 15 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதுடன் இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு என்ற அடிப்படையில் அதிக பட்சம் 8 பதிவுகளை வெளியிட முடியும்.
* ஒரு பதிவர் குறைந்த பட்சம் 9 நாட்களில் இரண்டு நாளுக்கு ஒரு பதிவு என்ற அடிப்படையில் 5 பதிவுகளை எழுத வேண்டும்.
* ஒரு பதிவர் தான் எழுதும் அனைத்துப் பதிவுகளும் தொடர் பதிவாக அமையுமாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு நாளைக்கு ஒரு வலைப்பதிவில் ஒரு பதிவுக்கு மேல் வெளியிடும் வலைப்பதிவுகளைக் கொண்ட வலைப்பதிவர்களுக்கு இதில் எழுத அனுமதி கிடையாது. காரணம், தினசரி செய்திகளை வெளியிட இணையத்தில் பல நூறு தமிழ் இணையத்தளங்கள் கொட்டிக்கிடக்கும் நிலையில் தினசரி 10 பதிவுகளை வெளியிட்டு அதனை திரட்டிகளிலும் பகிர்ந்து வளரும் பதிவர்களின் பதிவுகளை திரட்டிகளில் தோன்ற விடாமல் செய்வதனால் ஆகும்.
* உங்கள் அனுபவப் பகிர்வுகளை எமது வலைத்தளத்தில் பகிரும் உங்களுக்கான இறுதித் தினத்தில் இருந்து 100 நாட்களுக்குப் பின் அதனை உங்கள் வலைத்தளத்திலும் எங்கள் வலைத்தளத்துக்கான இணைப்புடன் வெளியிட முடியும்.
* இது பிற பதிவர்களையோ அல்லது பதிவுகளையோ அறிமுகப்படுத்தும் தளம் அல்ல.
* உங்களுக்கான ஆசிரியப் பணி குறித்து எங்கள் மின்னஞ்சல் கிடைத்ததும் உங்களுக்கான விருப்பத்தைத் தெரிவித்து உங்கள் அனுபவங்களைப் பகிர முடியும்.
* நீங்கள் எங்கள் அழைப்புக்காக காத்திருக்கத் தேவை இல்லை. உங்கள் விருப்பத்தை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் போதும். அழைப்பு உங்களை நாடி வரும்.
மேலதிக விதிமுறைகள் உங்களுடனான கலந்துரையாடல்களின் பின்னர் அறிவிக்கப்படும்.
இப்புதிய வலைப்பதிவுத் திட்டம் தொடர்பில் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடனான கலந்துரையாடல்களின் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். உங்கள் மனதில் பட்டதை தெளிவாய் இங்கே சொல்லுங்கள். விவாதிக்க நாம் தயாராகவே உள்ளோம்.
உங்களை எழுதுங்கள் .புதுயுகம் படைக்க வாருங்கள்.
-சிகரம்-