Monday 21 July 2014

முதலாம் மண்டேலா தினம்!

நெல்சன் மண்டேலா… ஜூலை 18, 1918-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள  முவெசோ என்ற ஊரில் பிறந்தார். முழுப் பெயர் ‘நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா’  ரோலிஹ்லாலா என்றால், தொல்லைகள் கொடுப்பவன் என்று அர்த்தம். இவரது தந்தை சோசா, பழங்குடி இன மக்களின் தலைவர்.

ஆடு மாடு மேய்த்துக்கொண்டே  குத்துச் சண்டையையும், பல்வேறு போர்க் கலைகளையும் பயின்றார். அவற்றை, ஆடு மாடு மேய்க்க வரும் மற்ற பிள்ளைகளுடன் பயிற்சி செய்வார். அப்போது ஏகப்பட்ட பழங்குடியினர் கதைகளைக் கேட்டு, தன் நாடு எப்படி ஆங்கிலேயர் வசம் போனது என அறிந்துகொண்டார்.


ஒன்பது வயதிலேயே தந்தையை இழந்தார். பின்னர் உறவுக்காரரான ஜோன்கின்தபா என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தன் இனத்திலேயே முதன் முதலில் பள்ளிக்குச் சென்ற மண்டேலா, படிப்பில் சுட்டியாக இருந்தார்.
ஜோன்கின்தபா இவருக்கும் இவரின் தம்பிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார். இதை விரும்பாத நெல்சன் மண்டேலா, வீட்டைவிட்டு ஓடிப்போய் சுரங்கத்தில் காவலாளியாகவும் தோட்டக்காரராகவும் வேலைபார்த்தார்.
நெல்சன் மண்டேலா, கல்லூரிக் காலத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ராணுவப் பிரிவை உருவாக்கினார். கல்லூரியில் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி, ஆயுதக் கலகம் விளைவிக்க முயன்றார். அதனால் கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டார்.
  
ஒரு வழியாக சட்டம் பயின்று முடித்தார். அப்போது கறுப்பின மக்களை அடக்கி ஆளும் தேசியக் கட்சி, தேர்தலில் வென்றதால், பல்வேறு போராட்டங்களில் கல்லூரித் தோழர்களுடன் ஈடுபட்டார்.  இலவசமாக சட்ட மையம் ஒன்றை ஆரம்பித்து, ஏழை மற்றும் அப்பாவிக் கறுப்பின மக்களுக்குச் சட்ட உதவி செய்தார்.

முதலில் அமைதி வழியில் செயல்பட்ட மண்டேலா, பிறகு ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்தார். அதனால், குற்றம்சாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் வழக்கு நடைபெற்றது. அப்போது பல மாறுவேடங்களில்  சுற்றினார். இங்கிலாந்து மக்களைப் ஃபிரான்ஸில் இருந்து காப்பாற்றிய நாயகன் பிம்பெர்னல் போல மாறுவேடம் பூண்டபோது, மக்கள் கறுப்பு பிம்பெர்னல் என அழைத்தனர்.


தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964 ஜுன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். 27 வருடங்கள் சிறையில் இருந்தார். உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இவருக்கு இல்லை.
இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது,  ‘மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. காந்தியின் சத்திய சோதனையைப் பொறுமையாக வாசித்தார். காந்தி மீது அபிமானம் ஏற்பட்டது. ‘எனக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்றார். 1990-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி கிளார்க் முயற்சியால் விடுதலை ஆனார்.

அரசாங்கத்துடன் நடந்த பல்வேறுகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, அனைத்து மக்களும் இணைந்து ஓட்டு அளிக்கும் முறைக்கு ஒப்புக்கொண்டனர். அப்போது நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஜனாதிபதி ஆனார்.  இவருக்கு 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ”நான் கறுப்பின மக்களின் விடுதலையை விரும்புகிறேன். அதே சமயம் வெள்ளையர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் வெறுக்கிறேன். நிறங்களைக் கடந்து மனிதர்களாக அன்பு செய்பவர்களாக என் நாட்டு மக்கள் திகழ வேண்டும்” என்றார் மண்டேலா.

********

தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவராகத் திகழ்ந்து மறைந்த நெல்சன் மண்டேலாவின் 96ஆவது பிறந்த நாள் கடந்த 18 ஆம் திகதி உலகெங்கும் 'மண்டேலா தின'மாகக் கொண்டாடப்பட்டது.

67 வருடங்கள் அவர் தங்களது நாட்டிற்கு சேவை செய்ததை நினைவு கூறும் விதமாக கடந்த ஐந்து வருடங்களாக லட்சக்கணக்கான மக்கள் அவரது பிறந்த நாளன்று 67 நிமிடங்கள் பொதுநல செய்கைகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு ஜோஹன்னஸ்பர்கிலும், நியுயார்க்கிலும் தொடங்கப்பட்ட இந்த பொதுநல நடவடிக்கைகள் இந்த ஆண்டு 126 நாடுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய நிகழ்ச்சிகள் பாரிஸ், நியுயார்க், டல்லாஸ், லண்டன், எடின்பரோ, லண்டன் போன்ற நகரங்களில் நடைபெற்றன. சீனாவில் அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியிடப்பட்டது. தென்னாப்பிரிக்க மக்கள் இந்த நாளை பள்ளிகளை சுத்தம் செய்வதில் தொடங்கி பெங்குவின் பறவையை தத்தெடுத்துக் கொள்ளுவது வரையிலான செயல்களில் ஈடுபட்டனர்.

அந்நாட்டின் அதிபர் ஜாகப் ஜுமாவும் மண்டேலா பிறந்த ஊரான முவேசொவில் உள்ள பள்ளி ஒன்றில் சுத்தம் செய்யும் பொறுப்பில் சிறிது நேரம் ஈடுபட்டார். மண்டேலாவின் பழங்குடிப் பெயரான மடிபா என்ற பெயரில் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் திட்டம் ஒன்றினை அறிவித்த அவர் இதன்மூலம் தங்களுடைய நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்துவதாகக் கூறினார். பத்திரிக்கை நிறுவனங்களும் தங்கள் தரப்பில் அநாதை இல்லங்களுக்கு உதவுவது, ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவது போன்ற பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தின.

இதுதவிர உணவு பாதுகாப்பும் மற்றொரு முக்கிய திட்டமாக இங்கு செயல்படுத்தப்பட்டது.மொத்த ஜனத்தொகையில் கால் பங்கு மக்கள் பசி, பட்டினியில் வாடுவதாக அறியப்படும் இந்த நாட்டில் பொதுமக்கள் காய்கறித் தோட்டங்களை உருவாக்கும் செயலிலும், இலவச உணவளிக்கும் திட்டங்களுக்கு உதவுவதிலும் ஈடுபட்டனர். உயர் குற்றங்களுக்குப் பெயர்போன இந்த நாட்டில் ஒருவர் சுய பாதுகாப்பு குறித்தும் 67 நிமிடங்கள் மற்றவர்களுக்கு இலவச பயிற்சிகளை அளித்தார்.

சர்வதேச அஞ்சலிகளில் கூகுள் நிறுவனம் பிரபலமான அதன் லோகோ [சின்னம்] வெளியீடு மூலம் மண்டேலாவை நினைவு கூர்ந்தது. அதுபோல் கிளாஸ்கோவில் நடந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றில் மண்டேலாவின் பேத்தி டுக்வினி மண்டேலா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

இதுதவிர பொதுமக்கள் சமூகரீதியாகத் தாங்கள் செய்யும் நல்ல செயல்களையும் இணையதளங்களில் குறிப்பிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர். அரசியல்வாதிகளும் ஊடக செய்திகளின் மூலம் தங்களின் சொந்த செல்வாக்கை உயர்த்திக்கொள்ள இத்தகைய நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

உலகெங்கும் முதல் மண்டேலா தினம் அனுசரிப்பு 
 நன்றிகள்:
18 & 19 / 07/2014.

3 comments:

  1. வணக்கம்
    ஐயா.
    மண்டேலா பற்றி நானும் பலவற்றை படித்திருக்கேன் இருந்தாலும் தங்களின் பதிவு வழி கூடுதலான தகவல் கிடைக்கப் பெற்றேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சிறந்த அறிஞரின் பகிர்வு

    ReplyDelete