Monday 10 October 2016

தோட்டத் தொழிலாளர்களும் சம்பள விவகாரமும் - 03

வணக்கம் வலைத்தள வாசகர்களே! 

இரண்டு வருடங்களுக்கு முன்பே அதாவது கடந்த கூட்டொப்பந்த சம்பள அதிகரிப்பின் போதே இந்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரப்பட்டது. ஆனால் அப்போது ரூ 620 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் வெறும் 110 ரூபாவே இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருட காலப்பகுதியில் வாழ்க்கைச் செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் 17 % த்தால் மட்டுமே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மலையகக் கட்சிகளின் கூட்டணி இன்று (2016.10.06) அறிவித்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 730 ரூபா நாட்சம்பளம் இன்றைய சூழலுக்குப் போதுமானதா? 30 நாட்களும் தொழில் புரிந்தாலே 21,900 ரூபா மட்டுமே கிடைக்கும். மேலும் எல்லா நாட்களும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படப் போவதில்லை. கொழுந்தின் அளவு மற்றும் வரவு ஆகியன இந்த 730 ரூபாவில் தாக்கம் செலுத்தும். ஆகவே மீண்டும் மிகக் குறைந்த வேதனம் ஒன்றையே மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளப் போகின்றனர். மலையக மக்கள் சிந்தித்துச் செயல் பட வேண்டிய நேரம் இது. சிந்திப்பீர்களா?

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை விவகாரத்தில் இலங்கை அரசு முதலாளிமார் பக்கமே பேசி வருகிறது. தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் பின் வருமாறு பேசியுள்ளார்.



''சம்பளத்தை 1000 ரூபாய் ஆக அதிகரிக்க கேட்பது தற்போதைக்கு சாத்தியமற்றது உலக சந்தையில் தேயிலை, ரப்பர் ஆகிய பெருந்தோட்டத்துறையில் பாரிய விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த காரணங்களால் தற்போது வழங்கப்படுகின்ற சம்பளத்தை அதிகரிக்க முடியாது என தோட்ட நிர்வாகங்கள் வலியுறுத்தி கூறியிருந்தன. ஆனால் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு கட்டாயம் தேவை என்ற கோணத்தில் பார்த்து தான் ரூ. 730 ஆக அதிகரிக்க செய்திருக்கின்றோம்'' என்று கூறினார்.

வேலை நாட்கள் எண்ணிக்கை பற்றி இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை. அது பற்றி இன்னமும் பேச வேண்டியுள்ளது. அடுத்த சில தினங்களில் இரு தரப்புடனும் பேசி முடிவொன்றை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

தொழிலாளர்கள் எதிர்பார்ப்பதுபோல் சம்பள அதிகரிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் நிலுவையுடன் அவர்களுக்கு கிடைக்குமா? என்று அவரிடம் கேட்ட போது '' இந்த சம்பளம் அரசாங்கம் கொடுப்பது அல்ல. தோட்ட நிர்வாகங்கள் தான் கொடுக்க வேண்டும். அதனை கொடுப்பதற்கு லாபம் இருக்க வேண்டும்'' என பதிலளித்தார் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன  - என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் தொழில் புரியும் மலையக உறவுகள் 2016.10.07 அன்று கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதுதவிர மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டத்தின் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பஸ் டிப்போவுக்கு சுமார் 40 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளர்கள் இதுவரை நஷ்டத்தைத் தவிர இதுவரை வேறு எதையுமே தம் வாழ்நாளில் கண்டதில்லையே? தொழில் அமைச்சர் மக்களின் வாழ்க்கைச் செலவு பற்றிய தெளிவுடன் தான் பேசுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. 

ஒரு நாளைக்கு ரூ 730 சம்பளம். வாரத்திற்கு ஆறு நாள் கணக்குப்படி ஒரு மாதத்துக்கு பார்த்தாலே 26 x 730 = 18980 ரூபா. ஊழியர் சேமலாப நிதி ரூபா 1518.40 கழிக்கப்பட்டால் கைக்குக் கிடைக்கப் போவது ரூபா 17461.60 தான். குடும்பத்தில் கணவன் - மனைவி இருவரும் உழைப்பதாக எடுத்துக்கொண்டாலே 2 x 17461.60 = 34923.20 ரூபா மட்டுமே வருமானமாகக் கிடைக்கும். இது ஐந்து பேரைக் கொண்ட குடும்பத்தின் செலவுக்குப் போதுமானதாக இருக்குமா? இதில் தொழிற்சங்க சந்தாக்கள் வேறு. இந்த நிலையில் மூன்று அல்லது நான்கு நாள் வேலை கொடுத்தால் சம்பளமாக கைக்கு எவ்வளவு தான் கிடைக்கும்? சிந்தித்துப் பாருங்கள். தனியார் நிறுவனங்களைப் போல மேலதிக வேலை நேரக் கொடுப்பனவு , போயா மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவு போன்ற மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இல்லை. ஆகவே இந்த சம்பளம் போதுமானதா என நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 

நாளொன்றுக்கு 1000 ரூபா சம்பளப்படி 26 நாட்களுக்கு குடும்பத்தில் இருவர் தொழில் புரிந்தால் ஊழியர் சேமலாப நிதி பிடித்தம் போக கைக்கு 47840 ரூபா கிடைக்கும். ஆனால் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் ஏனையோருக்கு சம்பளம் லட்சங்களில் இருக்கும். இது எந்த விதத்தில் நியாயம்? இப்போது சொல்லுங்கள். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம் நியாயமானது தானே? 

1 comment: